எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Saturday, December 10, 2005

அறிவுடைமை பற்றி வள்ளுவர் - 1


சுத்தியும் எங்கபாத்தாலும் ஆளுயரத்துக்கும் மேல காய்ஞ்சு போன மஞ்சள் நிறத்தில கதிரும், தட்டும், புல்லும் புதருமான அடர்த்தியான காடு. அதுக்கு நடுவுல பத்து பதினைந்து பேர் நடந்து போய்கிட்டு இருந்தாங்க. அந்தக்கூட்டத்தில ஒரு வயசானவரும் இருந்தாரு. தூரத்துல பாத்தா ஒரே புகை. நல்லா உத்து பாத்தா தீ பத்திக்கிட்டு எரியுது. சரின்னு இன்னொருபக்கம் திரும்பிப் பாத்தாலும் தீ கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தள்ளி எரிஞ்சுகிட்டு இருக்குது. கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தீ வளையத்துக்குள்ள அவங்க சிக்கிகிட்டாங்க.

காட்டுத்தீயோடு உஷ்ணத்தை பக்கத்துல போயி பாத்தா நல்லாபுரியும். எல்லாரும் உயிருக்கு பயந்துகிட்டு இருந்தாங்க. எந்தப்பக்கமா ஓடறது? எல்லாபக்கமுந்தான் தீ எரியுதே!

அப்ப பெரியவர், “நாம இங்க நமக்கு பக்கத்துல தீ பத்த வச்சு புதர்களை எல்லாம் எரிச்சு தீ நம்மகிட்ட வராதமாதிரி ஒரு பாதுகாப்பு பண்ணிக்கலாம்” ன்னு சொன்னாரு.

உடனே அங்க இருந்தா ஒருத்தர் தீப்பெட்டியை உரசி பக்கத்துல இருந்த புதரை பத்த வைக்கப்போனாரு. பெரியவர் உடனே “தம்பி நிறுத்து”. அப்படீன்னாரு.

“கொஞ்சம் பொறுத்திருந்து பத்த வைக்கலாம். ஏன்னா, தூரத்தில எரியுற தீ இன்னும் கொஞ்சம் பக்கத்துல வரும்போது தீ சூடா இருக்கறதனால காத்து அந்த தீயை பாத்து வீசும். இப்ப காத்து நம்ம பாத்துதான் வீசுது. அதனால தீ சுமாரா அரை கிலோ மீட்டர் தூரத்துல இருக்கும் போது பத்த வைக்கலாம். அப்பத்தான் நாம நெனக்கிறமாதிரி நாம பத்த வச்ச தீ எதிர் திசையில் போயி நம்ம காப்பாத்தும்” ன்னு மேலும் சொன்னாரு.

இப்படி திட்டமிட்டபடி அவங்க தீய பத்தவச்சு காட்டுத்தீயிலிருந்து தங்களை காப்பாத்திகிட்டாங்க.

இங்க அவங்கள காப்பாத்துனது அந்த பெரியவரோட அறிவு. இப்படி அறிவு நம்மை காப்பத்தறதப் பத்தி கோடிக்கணக்குல கதைகள் இருக்கு. அறிவுடைமை அதிகாரத்துல வள்ளுவர் முதல் குறள்ள “அறிவு அழிவிலிருந்து காக்ககூடிய ஒரு கருவி. அந்த அறிவு எதிரியாலும் உள்ளே வந்து அழிக்க முடியாதது” ன்னு சொல்றார்.

இப்ப இணையதளத்தையே எடுத்துக்குங்க. உதாரணமா இணையதளத்துல மின்னஞ்சல் பார்க்கப்போறோம். அப்போ மேலேயோ, பக்கத்திலேயோ மினுக் மினுக்குன்னு ஒரு விளம்பரம். இல்லைன்னா பாப்-அப் லே விளம்பரம். அதுல, ராசிபலன், ஜாதகம், குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சின்னோ அல்லது வேற ஏதாவது தேவையில்லாத, ஆனா ஆர்வத்தை தூண்டற மாதிரியோ இருந்ததுன்னா உடனே கிளிக். பார்க்கவேண்டிய மின்னஞ்சல் மறந்துபோச்.

அதே மாதிரி கணினிகள்ள ஏகப்பட்டவகையில் வைரஸ், worm ன்னு அழிவு தர்றமாதிரியோ அல்லது தொந்தரவு தர்ற மாதிரியோ புரொகிராம் எழுதறாங்க. அதுல பல பேரு சின்னவயசு பசங்கதான். இப்படி அழிவு தர்ற வழியில் புரொகிராம் எழுதாம open source ல உபயோகப்படற மாதிரி எத்தனையோ வகையில அவங்க புரொகிராம் எழுதினா எவ்வளவு நல்லாயிருக்கும்.

இதுக்குத்தானோ என்னவோ வள்ளுவர் 422வது குறள்ள, மனம் போன போக்கில அறிவை செலவு செய்யாம தீமைகளை ஒதுக்கி நன்மைகளை மனதில் வைத்து செலவு செய்வதே அறிவுன்னு சொல்றாரோ?

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். - 421

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. - 422


Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Friday, December 02, 2005

கேள்வி

கல்வி கற்பது பற்றி வள்ளுவர் 3 அதிகாரங்களா எழுதியிருக்காரு. ஏன் அப்படி எழுதியிருக்காரு? ன்னு கேள்வி கேட்டு பதிலும் சொன்னாங்க இலக்கிய ஆய்வுக்கூட்டத்துல.

கல்வி பத்தி சொல்ல அவர்கிட்ட நிறைய விசயங்கள் இருந்தது. அத்தனையும் ஒரே அதிகாரத்துல சொல்லமுடியாதுங்கறதனாலே 3 அதிகாரமா, கல்வி, கல்லாமை, கேள்வின்னு பிரிச்சு சொல்லியிருக்காரு அப்படீன்னு சொன்னாங்க.

இந்த அதிகாரத்தில கேள்வி அப்படீன்னா கேட்டு அறிவதால உண்டாகக்கூடிய அறிவு என்ற பொருளத்தான் எடுத்துக்கனும். நடைமுறையில, கேள்வின்னா வினா ங்கற பொருளும் உண்டு. ஆனா, இங்கே இந்த பொருள் பொருந்தாது.

நமக்கு கிடைக்கக்கூடிய தலையான செல்வங்கள் பலவற்றில் ‘கேள்வி ஞானம்’ ஒன்னுன்னு வள்ளுவர் முதல் குறள்ள சொல்றாரு.

பழம் அப்படீங்கற உரையாசிரியர் ஆங்கிலத்தில கேள்வி என்ற சொல்லை மொழிபெயர்க்கும்போது listening and learning இரண்டையும் சேர்த்து liserning ன்னு ஒரு வார்த்தைய உருவாக்கறாரு. இங்கே கேள்வின்னா வெறும் கேட்பது மட்டுமல்ல ‘கேட்டுக் கற்றுக்கொள்வது’ ன்னு பழம் சொல்றாரு.

அடுத்த 412வது குறள்ள பாத்தீங்கன்னா, ‘செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ அப்படீன்னு எழுதியிருக்காரு. அன்பர்கள் அப்போ சொன்னாங்க, ‘இந்த குறள்ள வள்ளுவர், சாப்பிடுங்கன்னு சொல்லறப்போ சிறிது வயிற்றுக்கும்னு சொல்லி கொஞ்சமா சாப்பிடுங்க அப்படீங்கறாரு’

ஆமா, அதிகமா சாப்பிட்டா தூக்கமில்ல வரும். அப்புறம் எப்படி கேட்கறது?

அதே சமயத்துல வள்ளுவர் இப்படிச் சொல்லறதாகவும் எடுத்துக்கலாம். கேட்டு அறிகிறேன்னு சொல்லிகிட்டு நல்லவர்கள் பேச்சை கேட்டுகிட்டே இருந்து உங்களுடைய உடல்நலத்தைக் கெடுத்துக்காதீங்க, இடையில இடையில கொஞ்சமா சாப்பிட்டு உடம்பை கவனித்துக்கொள்ளுங்க, அப்பத்தான் மேலும் மேலும் கற்க முடியும்ன்னு சொல்லறதாகவும் எடுத்துக்கலாம்.

என்ன இருந்தாலும், பசி காதை அடைக்கும் இல்லைங்களா? வள்ளுவர் அதையும் யோசிச்சுதான் எழுதியிருக்காரு.

அப்ப நண்பர் ஒருவர் சொன்னார்,

‘உத்திரப்பிரதேசத்தை (தலை) கவனிச்சுக்கிட்டு இருந்தாலும் மத்தியபிரதேசத்தையும் (வயிறு) அப்ப அப்போ கவனிச்சுக்கனும்’

413வது குறள்ள, நெய்வேத்தியம் தேவர்களுக்கு படைத்தால் எப்படி தேவர்கள் அதை சாப்பிடுவதில்லையோ, அது போல கேள்வி அறிவில் நாட்டமுடையவர்கள் நல்ல உணவுப்பொருள்கள் முன்னாலே இருந்தாலும் அதில் நாட்டம் கொள்ள மாட்டார்கள் என்கிறமாதிரி வள்ளுவர் சொல்கிறார்.

சாப்பாட்டில் நாட்டமில்லாத குணத்தில (மட்டும்) தேவர்களும், கேள்வியில் நாட்டமுள்ளவர்களும் ஒன்னுன்னு சொல்றார்.

ஆமா! நமக்கு தெரிஞ்சு எந்த காலத்துல படையலா வைத்த உணவுப் பொருள்களை தேவர்களோ, கடவுளர்களோ சாப்பிட்டிருக்காங்க? நாமதானே சாப்பிடறோம்.

414வது குறளுக்கு பொருள் சொல்லும் பொழுது கிட்டத்தட்ட எல்லா உரையாசிரியர்களும், கேள்வியறிவு உங்களோட வாழ்க்கையில தளர்ச்சியான காலகட்டத்துல ஊன்றுகோலாக இருந்து உதவும்னு சொல்லறாங்க.

ஆனா, இளங்குமரனார் மட்டும் வேறுபட்டு, ‘ஊற்றாம்’ ன்னா ‘ஊற்று நீர்’ ன்னு பொருள் சொல்லி ஊற்று நீர் போல பயன்தரும்ங்றார்.

415வது குறள்ள, நல்லவர்களுடைய சொற்களைக் கேட்டால் அது உன்னுடைய கஷ்டகாலத்தில் ஊன்றுகோலாக இருக்கும்னு சொல்றார். இங்கே பாத்தீங்கன்னா ‘கற்றவர்களுடைய சொற்களைக் கேட்டால்’ அப்படீன்னு சொல்லாம ‘நல்லவர்களுடைய சொற்களை கேட்டால்’ அப்படீன்னு எழுதியிருக்காரு.

நடைமுறையில எல்லா கற்றவர்களும் நல்லவர்களாக இருப்பதில்லை பாருங்க. நாட்டுல படிச்சவங்க பலபேரு பாவகாரியங்கள் பண்ணிகிட்டுதானே இருக்கிறாங்க. இன்னும் சொல்லப்போனா படிக்காதவங்களவிட படிச்சவங்க பண்ற அட்டூழியம்தான் அதிகமா இருக்குன்னு சொல்லுவாங்க. அதனாலதான் வள்ளுவர், கற்ற நல்லவர்களுடைய சொற்களைக் கேளுங்கள்னு சொல்லியிருக்கிறார்.

இப்படி நுணுக்கமா வள்ளுவர் பல விசயங்களை எழுதியிருக்காருன்னா, அவர் பல புத்தகங்களை படித்து ஆராய்ச்சி செஞ்சுதான் எழுதியிருக்கனும். அதனால, அந்த காலத்துல பல நுணுக்கமான புத்தகங்கள் இருந்திருக்கனும். எப்படியோ அந்த புத்தகங்கள் எல்லாம் நமக்கு கிடைக்காம போயிருச்சு. திருக்குறளாவது கிடைச்சுதே!

(எனக்கு ஒரு சந்தேகம், பல உரையாசிரியர்கள், 414, 415 குறள்களிலே வர்ற ‘ஊற்றாம்’ மற்றும் ‘ஊற்றுக்கோல்’ ஆகிய இரண்டு சொற்களுக்கும் ஊன்றுகோல் ன்னு பொருள் கொண்டு இருக்காங்க. இளங்குமரனார் மட்டும் ‘ஊற்றாம்’ (414)ங்கறதுக்கு ‘ஊற்று நீர்’ ன்னு சொல்றார். ‘ஊற்றுக்கோல்’ (415)க்கு ‘ஊன்றுகோல்’ ங்கற பொருள் சரியாத்தான் படுது. ஆனா, வள்ளுவர் ஒரே அதிகாரத்தில் ஒரே உதாரணத்தை அடுத்து அடுத்து வர்ற குறள்ள சொல்லியிருப்பாரா? இளங்குமரனார் சொன்ன பொருள்தான் சரியா இருக்குமோ?
உங்களுக்கு ஏதாவது கருத்து இருந்தா பின்னூட்டமிடுங்க)

416வது குறள்ள எந்த அளவுக்கு நல்ல விசயங்களைக் கேட்கிறோமோ அந்த அளவுக்கு பெருமை கிடைக்கும்ங்கறார்.

அடுத்த குறளுக்கு உரையாசிரியர்களோட உரைகள்ள சில வித்தியாசங்கள் இருந்தன, அதுல எனக்கு சரின்னுபட்டது இது. கேள்வி அறிவு உடையவர்கள், தவறிப்போய் எதையாவது தப்பா சொல்லிட்டு அது தப்புதான்னு புரிஞ்சுகிட்டாங்கன்னா, அதுக்கப்புறம், தான் சொன்னாதுதான் சரின்னு பிடிவாதமா தப்பையே சொல்லிகிட்டு இருக்கமாட்டாங்க.

இன்னொரு வகையில் சொன்னா, தான் சொன்னது தப்புன்னு தெரிஞ்சா, கேள்வியறிவுடையவர்கள், திருத்திக்கப் பார்ப்பாங்க.

You can be wrong but don’t be stupid

அடுத்த குறள்ள கேள்வியில் நாட்டமில்லாத செவி இருந்தாலும் செவிடானதாகத்தான் கருதப்படும்ங்கறார்.

419வது குறள்ள, கேள்வியறிவு இல்லாதவங்க பக்குவமா, பணிவா பேசறதுங்கறது அதிசயம்னு சொல்லறார்.

பல சமயங்கள்ள வள்ளுவர் அதிகாரத்தோட கடைசிக்குறள்ள பளார்ன்னு ஒரு அறை விடற மாதிரி எழுதியிருப்பாரு. இந்த அதிகாரத்தில பாருங்க, கேள்வியறிவோட சுவையை அறியாத சாப்பாட்டுராமங்க உயிரோட இருக்கறதுக்கும் உயிரோடு இல்லாம இருக்கறதுக்கும் என்ன வித்தியாசம்னு காட்டமா கேட்கிறார்.


செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. - 411

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும். - 412

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. - 413

கற்றில னாயினுங் கேட்க அ•தொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. - 414

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். - 415

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். - 416

பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா பிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர். - 417

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. - 418

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயினராதல் அ¡¢து. - 419

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். - 420


Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Friday, November 25, 2005

கல்லாமை பற்றி வள்ளுவர்்

குழந்தைங்க வீட்டுக்குப் பக்கத்தில் கட்டம் போட்டு ஒரு சின்ன சிப்பி அல்லது சில்லு வீசி விளையாடுவாங்க இல்லையா. அங்கே கட்டமோ சில்லோ இல்லைன்னா அவங்களால அந்த விளையாட்டை விளையாட முடியாது. அட! தாயம், பரமபதம், சதுரங்கம்னு இந்த விளையாட்டுக்களை எடுத்துகிட்டாலும் கட்டமும் கருவியும் முக்கியமில்லையா? இதுங்க இல்லாம இந்த விளையாட்டுகளை விளையாட முடியுமா?

வள்ளுவரும் கல்வி கற்காமல் ஒருவன் கற்றவர்கள் முன்னால பேச நினைக்கிறது இப்படி கட்டமும் கருவியும் இல்லாமல் இந்த மாதிரியான விளையாட்டுக்களை விளையாடறது போல அப்படீங்கறாரு. கிட்டத்தட்ட ஆய்வுக்கூட்டத்தில் ஆய்வு செய்ய எடுத்துக்கொண்ட எல்லா உரையாசிரியர்களும் இதே கருத்தைத்தான் கல்லாமை அதிகாரத்தில் வர்ற முதல் குறளுக்கு பொருளா சொல்லியிருக்காங்க.

அடுத்த குறளை வள்ளுவர் கொஞ்சம் ஏடாகூடமாத்தான் எழுதியிருக்காரு. அவர் ஏன் அப்படி எழுதினார்? அவருக்கு வேற உதாரணமே கிடைக்கலையா? அப்படீன்னு அன்பர்கள் பலர் சூடாகவே கேட்டாங்க. ஆனாலும், வள்ளுவர் இப்படி எழுதி வச்சுட்டாரே, அவரையும் கேட்க முடியாது, சரி உரையாசிரியர்கள் அந்த குறளுக்கு என்னதான் பொருளா சொல்லியிருக்காங்கன்னு பாக்கலாம்னு புத்தகங்களைப் புரட்டி பார்த்தாங்க.

கல்வி கற்காதவன் கற்றோர் முன் பேச முற்படுவது மார்பகங்கள் இல்லாத பெண்ணை விரும்புதல் போன்றது அப்படீன்னு பல உரையாசிரியர்கள் சொல்லியிருக்காங்க. மார்பகங்கள் இல்லாத பெண் என்று யாரை சொல்கிறார்கள்ங்கறதுல கருத்து வேறுபாடுகள் இருந்தது. சிலர், அரவாணிகள் அப்படீன்னு சொல்லியிருந்தாங்க. ஆனா, அதற்கு அன்பர்கள் பலர் பரந்த மனப்பான்மையுடன் பல குறள்களை எழுதியுள்ள வள்ளுவர் ஒரு இனத்தைக் குறை கூறுவதுபோல எழுதியிருக்க மாட்டார்ன்னு சொன்னாங்க. மற்ற சில உரையாசிரியர்கள் பருவமடையாத பெண் அப்படீன்னு சொல்லியிருந்தாங்க.

வள்ளுவர் வேற உதாரணம் சொல்லாம, ஏன் இந்த உதாரணம் எடுத்துக்கிட்டாருங்கற கேள்விக்கு, அந்த காலத்துல இது கொச்சையா இல்லாம இருந்திருக்கலாம், இல்லைன்னா இலக்கியத்தில் இது சாதாரணமா இருந்திருக்கலாம், இல்லைன்னா ஆணாதிக்கம் கொண்ட சமுதாய காலகட்டத்துல எழுதப்பட்டதால இப்படி இருந்திருக்கலாம்னும் பலவிதமா கருத்துக்கள் சொன்னாங்க.

அடுத்த குறள்ள, பேசாம இருக்கிறவரைக்கும் படிக்காதவன் பார்ப்பதற்கு படிச்சவன் மாதிரி தெரிவான், அதனால, படிச்சவங்க முன்னால பேசனும்னா படிங்கன்னு மறைமுகமா சொல்றாரு வள்ளுவர்.

ராமர்பிள்ளைன்னு ஒருத்தர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கறதா சொன்ன செய்தி நினைவில் இருக்கும்னு நினைக்கிறேன். அந்த ராமர்பிள்ளையோட மூலிகை பெட்ரோல் ஐடியா இன்னைக்கு பெட்ரோல் விக்கிற விலையில என்னவோ கேட்பதற்கு நல்லாத்தான் இருந்தது. ஆனா படிச்ச விஞ்ஞானிகளுக்கு நடுவுல அவரோட மூலிகை பெட்ரோல் தயாரிக்கும் செயல்முறை ஒன்னும் எடுபடுல பாருங்க.

இந்த மாதிரி படிக்காதவன் நல்ல ஐடியாக்களைக் கொடுத்தாலும், அந்த ஐடியாவைப் பத்தி அடிப்படையுடன் சரியா ஒத்துக்கொள்ற மாதிரி விளக்கத் தெரிய வேண்டிய கல்வி இல்லைன்னா, படிச்சவங்க அவனை ஏத்துக்கமாட்டாங்கன்னு 404வது குறள்ள வள்ளுவர் சொல்றாரு.

கூட்டத்தில வானிலை ஆராய்ச்சியாளர் ஒருத்தரும் இருந்தார். அப்ப அவர் - இப்ப ரோட்டுல போற ஒருத்தரு புளாரிடா பக்கத்துல வந்துகிட்டு இருக்கிற புயல், புளாரிடாவுக்கு வராது, நேரா மெக்ஸிகோ போயிடும்னு சொல்லிட்டு அவர் பாட்டுக்கு போயிகிட்டு இருப்பாரு. அவருக்கு வானிலை ஆராய்ச்சி பத்தி ஒன்னும் தெரியாம இருக்கும். ஆனா, சில சமயம் அவர் சொன்ன மாதிரியே புயல் மெக்ஸிகோ நோக்கி போயிடலாம். அதுக்காக, அவரை நல்ல வானிலை ஆராய்ச்சியாளர்ன்னு ஒத்துக்க முடியாது. ஏன்னா அவரால ஏன் மெக்ஸிகோவுக்கு புயல் போச்சுன்னு விளக்க முடியாது. கிட்டத்தட்ட இந்த சூழ்நிலையத்தான் வள்ளுவர் 404வது குறள்ள சொல்றார் அப்படீன்னார்.

கல்லாதவன் பேச ஆரம்பிச்சா கொஞ்ச நேரத்திலேயே அவனுடைய பேச்சில் கல்வி கற்காத காரணத்தால் தொய்வு ஏற்பட்டுவிடும்ங்கறார் வள்ளுவர் அடுத்த குறள்ள.

பேருக்கு இருக்கிறான் என்பது மட்டும்தான், கல்லாதவன் ஒன்றுக்கும் உதவாத களர் நிலம் மாதிரி என்று உரையாசிரியர்கள் 406வது குறளுக்கு பொருள் சொல்லறாங்க. சில உரையாசிரியர்களோ களர் நிலத்தையும், பண்படுத்தினால் பயன் தரும், அதுபோல, கல்லாதவன் கற்றால் தான் பயனடைவதோடு பிறர்க்கும் பயந்தருவான் என்கிறார்கள்.

407வது குறள்ள கல்வி கற்காதவனை நல்ல கலர் சாயமடித்த பொம்மைன்னு வள்ளுவர் சொல்றார்.

நல்ல மனிதன் வறுமைப்படுவதைக்காட்டிலும், மோசமானது, கல்லாதவனிடம் இருக்கக்கூடிய செல்வம் அப்படீன்னு 408வது குறள்ள சமுதாயத்தில் கல்வி கற்க, கற்பிக்கபடனுங்க்கறதுக்கு முக்கியத்துவம் தர்றாரு. ஏன்னா, செல்வம் யார்கிட்ட வேணும்னாலும் போகக்கூடியது. அதனால, கல்லாதவனாக யாரையும் விட்டு வைக்காதீங்க, அப்படி விட்டு வெச்சீங்கன்னா, செல்வம் அவன்கிட்ட போறப்ப உங்களுக்கு சிரமம்னு சமுதாயத்துக்கு சொல்றதாத்தான் நான் நினைக்கிறேன்.

சமுதாய அந்தஸ்துன்னு ஒன்னு இருக்கத்தானே செய்யுது. குடி அப்படீன்னு வள்ளுவர் சொல்றப்ப எல்லாம் அவர் சாதியைப் பத்தி பேசறதா நான் நெனக்கல. ஏன்னா, சமுதாயத்தில் ஒருத்தருக்கு நல்ல தொழிலும், கல்வியும், அதிகாரமும், செல்வமும் இருந்ததுன்னா அவரால அவருடைய குழந்தைகளுக்கும், சொந்தக்காரங்களுக்கும் ஒரு பெருமை வரும். இதைத்தான் குடி பெருமைன்னு வள்ளுவர் சொல்றதா நினைக்கிறேன். இந்த பெருமையைக் காப்பாத்தற மாதிரி மேல சொன்ன எல்லாரும் நடந்துகிட்டாங்ன்னாத்தான் அந்தப் பெருமை நிலைக்கும். (வள்ளுவர் காலத்துல சாதி இருந்திருக்கலாம். ஆனா, அதுக்காக வள்ளுவர் சாதியை எங்கேயும் ஒத்துக்கிட்டதாவோ, ஆதரிச்சதாவோ தெரியல)

இப்படி பெருமை மிக்க குடியில பிறந்தாலும், ஒருத்தன்/ஒருத்தி படிக்கலைன்னா அவன் படிக்காதவந்தான். குடிபெருமை ஒன்னும் அவனைக்காப்பாத்தாது. அதே நேரத்துல இப்படி பெருமையில்லாத குடியில் பிறந்தாலும், ஒருத்தன்/ஒருத்தி நல்லா கல்வி கற்றால், மேன்மை அடைவான்/ள். அதனால், எந்த சூழலில் இருந்தாலும் கல்வி கற்பது முக்கியம்னு 409வது குறள்ள வள்ளுவர் சொல்லறார்.

கடைசிக் குறள்ள ஒரே போடா போட்டுட்டாரு வள்ளுவர். கல்வி கற்கவில்லைன்னா நீ விலங்குக்கு சமானம் அப்படிங்கறாரு.


அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். - 401.

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்காமுற் றற்று. - 402.

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். - 403.

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். - 404.

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். - 405.

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர். - 406.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று. – 407.

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. - 408.

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. - 409.

விலங் கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். - 410.
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Saturday, November 19, 2005

கல்வி பற்றி வள்ளுவர்

கல்வி அதிகாரத்தையும் இலக்கிய ஆய்வுக்கூட்டம் அலசியது. ஒவ்வொரு குறளையும் தனித்தனியாக, பொறுமையாக தெளிவாக ஆய்வு செய்தார்கள். அப்பொழுது கூட்டத்தில் வெளிப்பட்ட கருத்துக்களில் சிலவற்றை இங்கே சுவைக்காக சிறிது மாற்றம் செய்து தொகுத்துக் கொடுக்கிறேன்.

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

இந்த அதிகாரத்தில் முதல் குறளை இப்படியும் படிக்கலாம் என்று சொன்னார்கள்.

கற்க கற்க
கற்க கசடற
கற்க கற்பவை
கற்க கற்றபின்
கற்க நிற்க
கற்க அதற்குத் தக

இலக்கண முறைப்படி இல்லாவிட்டாலும், இப்படிப் படிப்பது ஒரு சுவையாகத்தான் இருந்தது.

இங்கேயும் பார்த்தீர்களானால், பொருளாதாரம், வரலாறு அல்லது அறிவியல் என்று இதைப் படி என்று சொல்லாமல், வள்ளுவர் பொதுவாக கற்க கற்பவை என்று சொல்கிறார்.

பேச்சு இப்படி சிறிது நேரம் போனது. அதில் மிகச்சிறிய பகுதி மட்டும்.

ராச்செஸ்டர் பல்கலக்கழத்திலிருந்து கொடுக்கப்பட்ட கல்வித்திட்டப் புத்தகத்தில் “கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு” என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதி அதனடியில் அழகாக “அவ்வையார்” என்று எழுதியிருந்ததுங்க.

அனேகமா யாராவது தமிழர் அங்கு இருந்திருப்பார். அவர்தான் இப்படி எழுதச் செய்திருப்பார்.

இப்படிச் செய்தவர் ஒரு மாணவனாகக்கூட இருந்திருக்கலாம்.

ஆமா, இந்த் ஊரிலே, ராச்செஸ்டர் பல்கலைக்கழத்தில் இப்படி எழுதவேண்டும் என்று இல்லையே? எத்தனையோ இது போல் ஆங்கிலத்தில் இருக்கத்தானே செய்கிறது

ஆனா பார்த்திங்கன்னா, கல்வி நிறுவனத்திற்கு “கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு” ங்கறது ஒரு அருமையான மார்க்கெட்டிங் டூல்.

சரியாச் சொன்னீங்க. நல்ல மார்க்கெட்டிங் டூல்தான்

இது ஒரு நல்ல முயற்சி. நாமும் நம்முடைய தொழிலில் எப்படி எப்படி தமிழில் உள்ள நல்ல விஷயங்களைக் கொண்டுவர முடியுமோ அப்படியெல்லாம் முயற்சி செய்யவேண்டும்.

நல்ல ஐடியாங்க!

கார்ல்சேகன் என்பவர் பல வானவியல் புத்தகங்களை எழுதியிருக்காருங்க. அவர் இறக்கிற சமயத்தில் “Contact” என்ற புத்தகத்தை எழுதியிருந்தாருங்க. அந்தப் புத்தகம் திரைப்படமாகக் கூட வந்ததுன்னு நினைக்கிறேன். அந்த புத்தகத்தில் ஓரிடத்தில் வேறுகிரகத்துக்கு பூமியிலிருந்து மனிதர்களை அனுப்புகிற மாதிரி ஒரு காட்சி வரும். அதில், விண்வெளி ஓடத்தில் செல்ல 5 பேரைத் தேர்ந்தெடுப்பாங்க. அதில் ஒருத்தர் தமிழ்ப்பெண். பழமையான திராவிட நாகரிகத்தின் சார்பாக அந்த தமிழ்ப்பெண்ணைத் தேர்ந்தெடுத்திருப்பாங்க. அடுத்த கூட்டத்துக்கு அந்தப் புத்தகத்தைக் கொண்டு வர்ரேங்க.

ம் . . . அப்படிங்களா!

அடுத்த குறளில், எண்ணும் எழுத்தும் இரு கண்களைப் போன்றது என்கிறார் வள்ளுவர். எழுத்து என்று சொல்லும் பொழுது எந்த ஒரு மொழியையும் சொல்லாமல் வெறும் எழுத்து என்று பொதுவாக சொல்கிறார் வள்ளுவர்.


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். - 394

கல்வி கற்றவர்கள் மகிழ்ச்சியுடன் கூடி, அளவளாவி கருத்துக்களைப் பரிமாறியபின் பிரிய மனமில்லாமல் பிரிவார்கள் என்பது பல உரையாசிரியர்களின் கருத்து. நாமக்கல் கவிஞர் உரை வேறு மாதிரி விலகி ஒப்புக்கொள்ள இயலாதவாறு இருந்தது.

(இக்குறளைப் பற்றி சிறுஆராய்ச்சி செய்திருக்கேன். அது பற்றி அடுத்த கூட்டத்தில் கலந்து ஆலோசித்ததுக்கு அப்புறம் அது உருப்படியா இருந்ததுன்னா அடுத்த வலைப்பூவில் எழுதறேன்)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. - 396

பேச்சு இப்படிப்போனது.

இங்க பார்த்தீங்கன்னா “தொட்டனைத்து” என்பது மண்ணைத் தோண்டுவதாக இருக்காது என்று நினைக்கிறேங்க. ஏன்னா! கிணத்துல தண்ணி இறைக்க இறைக்க நல்லதண்ணி ஊறும். அதனால, வள்ளுவர் தண்ணீ இறைக்க இறைக்க அப்படீங்கற பொருள்ளதான் “தொட்டனைத்து” அப்படீன்னு சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன்.

ஆனா! பாத்திங்கன்னா, ஆத்து ஓரத்துல மணல்ல எவ்வளவு ஆழம் தோண்டறீங்களோ அந்த அளவுக்குத்தான் நீர் சுரக்கும்.

ஆமா ஆமா இங்கேகூட வள்ளுவர் மணற்கேணி அப்படீன்னுதானே சொல்லியிருக்கிறார். கேணின்னா கிணறு. மணற்கேணின்னா மணல் கிணறு. அதனால, வள்ளுவர் ஆத்தங்கரையோரமுள்ள மணல் கிணறு தோண்டறதைத்தான் இங்க சொல்லியிருப்பார்.

எந்த அளவுக்கு படிக்கிறிங்களோ அந்த அளவுக்கு அறிவு வளரும் என்பதுதான் கருத்து.

அடுத்த குறள்ள பாத்தீங்கன்னா, இரண்டு அர்த்தங்கள் வரும். அவை என்னன்னா,

1. எந்த நாடும் உன்னுடைய நாடு ஆகும், எந்த ஊரும் உன்னுடைய ஊர் ஆகும் என்கிற மாதிரி கல்விக்கு பெருமை இருப்பாதனால நீ ஏன் இறக்கும் தருவாய் வரைக்கும் படிக்காம இருக்கிறாய்?
2. இப்படி பல பயன்கள் கல்வி கற்பதால் இருக்கிற காரணத்தால, ஏன் தொடர்ந்து சாகிறவரைக்கும் படிக்காம இருக்கிறாய்?

ஆமா கடைசிவரைக்கும் கற்றுக்கொண்டு இருந்தால் Alzheimers வராது அப்படீன்னு சொல்வாங்க.

வீடியோ கேம் கூட Alzheimersஐ குணப்படுத்த/தவிர்க்க உதவறதாவும் சொல்லறாங்க.

மூதுரையில் வர்ற பாடல்ல இப்படி இருக்கு.

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.


இப்பவே பாருங்களேன். நாமே படித்ததால்தானே இங்கு (அமெரிக்காவுக்கு) வர முடிந்தது.

திருவள்ளுவர் காலத்துல பல நாடுகளோடு தமிழகத்திற்கு தொடர்பு இருந்ததா?

ஆமாங்க. பல வாணிபத் தொடர்புகள் இருந்திருக்கு.

ஆமா. உதாரணமா, oriza sativa அப்படிங்கறது அரிசியோட தாவரவியல் பெயர். அதுல வர்ற oriza அப்படிங்கறது கிரேக்க மொழியிலிருந்து வந்தது. ஆனால், orizaங்கற கிரேக்க வார்த்தை அரிசி என்ற தமிழ் வார்த்தையிலிருந்து வந்ததா சொல்வாங்க.

ஆமாங்க யுவான்சுவாங் என்பவர், சீனாவிலிருந்து இந்தியா வந்து பல இடங்கள சுத்திப் பாத்து குறிப்புகள் எழுதினதாச் சொல்வாங்க. அவர் படித்து இருந்ததால அவருக்கு எல்லா இடத்திலும் சிறப்பான வரவேற்பு கிடைத்ததாச் சொல்வாங்க.

தமிழகத்துல காஞ்சிக்கூட வந்து போனதா சொல்வாங்க.

அடுத்த குறளைப்பார்ப்போம்.

ஒருமுறை கற்றகல்வி பல தலைமுறைகளுக்கு உதவும் அப்படீங்கற மாதிரித்தான் சொல்வாரென்று நினைக்கிறேன். ஏன்னா “எழுமை” ங்கற வார்த்தைக்கு ஏழு பிறப்பு என்று பொருள் கொண்டால் சரியாக வருமா? என்பது கேள்வி


அதற்கு அடுத்த குறளில், படித்த காரணத்தால் தான் இன்புறுவதோடு உலகமும் இன்புறுவது கண்டு கற்றவர்கள் மேலும் மேலும் கல்வி கற்க முற்படுவார்கள் அப்படீங்கறார் வள்ளுவர்.

கடைசி குறளில், கல்வியை “கேடு இல்லாத செல்வம்” என்று சொல்கிறார்;


Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Friday, November 11, 2005

இறைமாட்சி

ஒரு குறிக்கோளை நோக்கி உழைக்கும் பொழுது அதில் ஒரு சிறிய பகுதி வெற்றிகரமாகா முடிந்தால் எப்படி மனது குதூகலமடையுமோ அது போன்ற மகிழ்ச்சியுடன் வாஷிங்டன் வட்டார தமிழ் இலக்கியவட்டம் நவம்பர் 6, 2005 அன்று கூடியது. அறத்துப்பால் அதிகாரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த பின்னர், அதற்கு ஒரு மீள்பார்வைக் கூட்டமும் முடித்து மற்றொரு புத்துணர்ச்சியுடன், பொருட்பாலின் முதல் அதிகாரமான் இறைமாட்சியை ஆய்வு செய்தது. அப்பொழுது வெளிப்பட்ட கருத்துக்களில் சிலவற்றை பார்க்கலாம் வாங்க.

பொருட்பால் ஏன் திருக்குறளில் இரண்டாவதாக வைக்கப்பட்டுள்ளது?

வள்ளுவர் கருத்துப்படி, பொருள் சேர்த்தலுக்கு அறமே அடிப்படை என்ற காரணத்தினாலேயே பொருட்பால் அறத்துப்பாலுக்கு அடுத்து வைக்கப்பட்டுள்ளது. பொருளானது அறவழியிலேயே சேர்க்கப்படவேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார்.

பொருட்பாலை wealth என்று மொழிபெயர்ப்பது சரியாகப்படவில்லை என்று முனைவர் வா.செ. குழந்தைசாமி சொல்கிறார். ஆனால், G.U. Pope முதற்கொண்டு S.M. Diaz வரை wealth என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

பொருட்பால் கருத்துக்கள் அரசனுக்கு மட்டுமல்ல, குடியாட்சி நிர்வாகத்துறைக்கும் பொருந்தும்.

கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்திலும் வள்ளுவரின் பொருட்பால் கருத்துக்கள் பல உள்ளன. வள்ளுவர் கௌடில்யர் கருத்துக்களை உள்வாங்கினாரா? அல்லது கௌடில்யர் வள்ளுவர் கருத்துக்களை உள்வாங்கினாரா? அல்லது தனித்தனியாகவே எழுதினரா? என்பது தெரியவில்லை.

ஆனால், அர்த்தசாஸ்திரமும், மாக்கியவெல்லியத்தின் 'பிரின்ஸ்'ம் பல சூழ்ச்சி வழிகளை அரசனுக்கு சொல்கிறது. ஆனால், வள்ளுவமோ அறவழியிலேயே அரசனுக்கு பல கருத்துக்களைச் சொல்கிறது.

'இறு' என்றால் தங்கியிருத்தல் என்று பொருளாம். எங்கும் நிறைந்திருப்பவன் என்ற பொருளிலே 'இறைவன்' என்ற சொல்வந்ததாம்.

பல நாகரிகங்களில், அரசன் என்பவன் கடவுளால் படைக்கப்பட்டவன் அல்லது கடவுள் என்று இருந்தது. ஆனால், வள்ளுவர் கூற்றுப்படி அரசன் என்பவன் முறையாக ஆட்சி செய்தாலே அரசனாகக் கருதப்படுவான். அரசனை இறைவன் என்று சொல்லிவிட்டால் , அவனை குறைசொல்ல முடியாது. ஆனால், வள்ளுவரோ பல இடங்களில், அரசனிடம் குறைகாண முற்படுதலை சுட்டுகிறார்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். - 448
( திருக்குறள ்)

என்றும், இவ்வதிகாரத்திலேயே,

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. - 389 ( திருக்குறள் )


என்றும் சொல்கிறார்.


அரசனுக்குரிய குணங்களாக பல குணங்களை இவ்வதிகாரத்தில் சொல்கிறார். நுணுக்கமாகப் பார்த்தால், அவர் எந்த குணத்தையும் திரும்பச் சொல்லவில்லை என்பது புரியும்.

எடுத்துக்காட்டாக, ஒரு குறளிலே, அஞ்சாமை வேந்தனுக்கு இயல்பாக இருக்க வேண்டுமென்கிறார். அடுத்த குறளிலேயே, துணிவுடைமை அரசனுக்கு வேண்டியது என்கிறார். அஞ்சாமைக்கும், துணிவுடைமைக்கும் வித்தியாசம் உண்டா? ஆம். உண்டு.

உதாரணமாக, நீங்கள் காட்டிலே சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது ஒரு சிங்கம் உங்களைத் தாக்க வருகிறது. அப்பொழுது அதை எதிர்த்துப் போராடினீர்களானால், அது அஞ்சாமை.

அதே நேரத்தில், நீங்களே சிங்கத்தின் குகையினைத் தேடிச்சென்று அதனுடன் போராடினீர்களானால், அது துணிவுடைமை.

அஞ்சாமை - courage
துணிவுடைமை - bravery

ப.சிதம்பரம் அவர்கள் பட்ஜெட் கூட்டத்தில், கோட்டிய குறள்

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. - 385 ( திருக்குறள் )



மேலும்,

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். - 386 ( திருக்குறள ்)


குறளைப் படிக்கும் பொழுது, அன்பர்கள் அப்துல் கலாம். மன்மோகன் சிங், அண்ணாதுரை போன்ற காட்சிக்கெளியோரையும் அவர்கள் அனுபவத்தினையும் பகிர்ந்து கொண்டார்கள்.

இன்னொரு நுணுக்கமான வித்தியாசமும் உண்டு. ஈகை என்று ஒரு குறளிலும் கொடை என்று மற்றொரு குறளிலும் வள்ளுவர் அரசனுக்கு வேண்டிய குணமாகச் சொல்கிறார்.

கொடைக்கும் ஈகைக்கும் என்ன வித்தியாசம்?

இந்த கேள்விக்கும் பதில் கிடைத்தது.

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை. (வறியவர்களுக்கு கொடுப்பதே ஈகை)

ஆனால், இருப்பவற்கும் கொடுப்பது கொடை.

ஈகை - Charity
கொடை - Gift

வள்ளுவர் அரசனுக்கு இருக்க வேண்டிய அம்சங்களாக இறைமாட்சி அதிகாரத்திலே சொல்லியிருப்பதை இங்கே வரிசைப்படுத்தியிருக்கிறேன்.

1. படை (பொதுவாக படை என்று சொல்லியிருக்கிறார்)
2. குடி (குடி மக்கள்)
3. கூழ் (உணவுப் பொருள்கள்)
4. அமைச்சு
5. நட்பு
6. அரண்
7. அஞ்சாமை
8. ஈகை
9. அறிவு
10. ஊக்கம்
11. தூங்காமை (சோம்பலின்மை அல்லது காலம் தாழ்த்தாமை)
12. கல்வி
13. துணிவுடமை
14. அறம்
15. மறம்
16. இயற்றல் ( பொருள் சேரும் வழிகளை இயற்றல்)
17. ஈட்டல் (பொருள்களை ஈட்டுதல்)
18. காத்தல் ( ஈட்டிய பொருளைகளைக் காத்தல்)
19. வகுத்தல் ( காத்த பொருளை சரியாக பங்கிட்டு செலவு செய்தல்)
20. காட்சிக்கு எளியனாக இருத்தல்
21. கடுஞ்சொல் சொல்லாதிருத்தல்
22. இன்சொல் சொல்லி வேண்டியதைக் கொடுத்துக் காத்தல்.
23. முறை செயதல் (நீதி முறை செய்து குடிகளைப் பேணுதல்)
24. செவி கசக்குமாறு தன்னைச் சொல்லும் குறைகளைப் பொறுத்தல்
25. கொடை
26. அளி ( அருள், கருணை )
27. செங்கோல்
28. குடிகளைக் காத்தல்

கூட்டத்தில் இன்னும் நிறையப் பேசப்பட்டது.

-நித்தில்


Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Saturday, November 05, 2005

புதிர் #3

நண்பர்கள் குழுவாக நின்று கொண்டு அளவளாவிக்கொண்டு இருந்தார்கள். வழக்கம் போல ஒரு நண்பர் அவருடைய தீரக்கதைகளைச் சொல்லிக்கொண்டு இருந்தார். அப்பொழுது அவர் சொன்னார்,
"மரங்களுக்கிடையில் நான் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்த பொழுது அந்த மிருகம் ஓடையைக் கடந்து வந்தது. அப்பொழுது என்னால் அதன் நான்கு நனைந்த முழங்கால்களின் முன்பகுதிகளைப் பார்க்க முடிந்தது. . ."

சரியாக இந்த நேரத்தில் வரதன் அங்கு வந்தான். கதைசொல்லிக்கொண்டிருந்த நண்பரைப் பார்த்து நீ எந்த மிருகத்தைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்கின்றாய் என்று எனக்குத் தெரியும் என்றான்.

உங்களுக்கு தெரியுமாங்க?
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

புதிர் #2

இன்னொரு புதிரையும் பார்ப்போங்க...

இரண்டு மனிதர்கள் ஆஸ்திரேலியாவின் அடர்ந்த காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கும் போது உலகத்திலேயே உயர்ந்த மரத்தைப் பார்த்தாங்க. சுற்றிலும் எங்கு பார்த்தாலும் மரங்கள். அவர்கள் மரத்தின் உயரத்தை துல்லியமாக அளக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் அவர்களிடம் எந்தவிதமான நவீன உயரமளக்கும் கருவிகளும் இல்லை. ஆனாலும் அவர்கள் அம்மரத்தின் உயரத்தை சரியாக அளந்துவிட்டார்கள். எப்படிங்க?

துப்புகள்:

1. அவர்கள் கோணங்களையோ, நிழலையோ உபயோகப்படுத்தவில்லை
2. அவர்கள் மரத்திலும் ஏறவில்லை
3. அவர்கள் கயிறையும், அளவுகோலையும் உபயோகப்படுத்தினார்கள்.

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

புதிர் #1

lateral thinkingக்கு பக்கவாட்டுச் சிந்தனை என்ற மொழிபெயர்ப்பு சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். இப்படி பக்கவாட்டுச் சிந்தனைப் புதிர்கள் சிலவற்றை உங்களுக்குக் கொடுக்கலாம் என்று இருக்கிறேங்க. நம்ம ஊர் விடுகதைமாதிரிதான் இதுவும். உதாரணமாக இந்தக் கதையைப் பார்க்கலாங்க.

தீவிரப்பாதுகாப்புச் சிறையில் இருக்கும் கைதி ஒருவனுக்கு அவன் மனைவி கடிதம் அனுப்பியிருந்தாள்.
"அன்பே நான் இப்பொழுது தோட்டத்தில் கடலை பயிரிடலாம் என்று இருக்கிறேன்"

அதற்கு அந்த கைதி பதிலளிக்கையில்,
"அன்பே, இப்பொழுது பயிரிடாதே! ஏனென்றால், அங்குதான் நான் துப்பாக்கிகளைப் புதைத்து வைத்திருக்கிறேன்" என்றான்.

சிறிது காலம் சென்றபின் இன்னொரு கடிதம் அவன் மனைவியிடமிருந்து வந்தது. அதில்

"அன்பே, நிறைய போலீஸ்காரர்கள் நம் தோட்டத்தைத் தோண்டினார்கள். ஆனால், அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றிருந்தது.

அதற்கு, கைதி பதிலில்,

"அன்பே, இப்பொழுது நீ கடலை பயிரிடலாம்" என்றான்.

இங்கு இந்தக் கைதி பக்கவாட்டுச் சிந்தனையை உபயோகப்படுத்தி தனது தோட்டப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டான். இப்படி, சில புதிர்களைப் பார்க்கலாம் வாங்க.

புதிர் #1:

ஒரு எருது ஒரு நாள் முழுவது நடந்து கொண்டேயிருந்ததுங்க. கடைசியில் பார்த்தால், அதனுடைய இரண்டு கால்கள், 32 கிமீ நடந்து இருந்ததுங்க. ஆனால், மற்ற இரண்டு கால்களோ 30 கிமீ தான் நடந்து இருந்ததுங்க. இது எப்படிங்க?


துப்புகள்:

1. கடைசிவரை அந்த எருது உயிருடன்தான் இருந்ததுங்க.
2. அந்த எருது மற்ற எருதுகள் போல சாதாரணமானதுதாங்க. சிறப்பம்சங்கள் எதுவுமில்லைங்க.
3. அது வேலை செய்யும் எருதுங்க.

விடை தெரிந்தாலோ அல்லது மேலும் தகவல் வேண்டுமானாலோ பின்னூட்டமிடுங்க.

-நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Monday, October 24, 2005

வள்ளுவர் அறம், அறவினை போன்றவற்றை வரையறுக்கிறாரா?

வள்ளுவன் அறம், அறநெறி (அறத்தாறு), அறவினை போன்றவற்றை வரையறுத்து இருக்கிறாரா? அப்படி வரையறுத்த குறள்கள் உண்டா? இந்த கேள்விக்கு விடை காணலாம் என்ற எண்ணத்தில் அறத்துப்பால் குறட்பாக்களைப் புரட்டிப்பார்த்தேன். அப்பொழுது என் கண்ணிற்கு புலப்பட்ட குறள்கள் இவை. ஒரே குறளில், அறத்திற்கு முழு definition கொடுத்ததாகத் தெரியவில்லை. அறம் என்ற பரந்துபட்ட சொல்லை இரண்டு வரிகளில் வரையறுத்து விடவும் முடியாதுதான்.


முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். - 93


முகம் மலர்ந்து, மனத்தின் அடி ஆழத்திலிருந்து இனிமையான சொற்கள் சொல்வது அறம் என்கிறார். ஆனால் மனத்தில் அடி ஆழத்திலிருந்து வராத இன்சொல் அறத்தின் பெருமை கொண்டது இல்லை என்பதை,

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். -911 (பொருட்பால்)


என்கிறார்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். - 35


இந்தக் குறளில், பொறாமை, ஆசை, கோபம், இன்னாச்சொல் என்ற நான்கும் இல்லாமலிருப்பது அறம் என்கிறார்.


அறனறிந்து வெ•கா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. - 179


இங்கு, மறைமுகமாக அறம் என்றால் என்ன என்று சொல்கிறார். அறத்தினை அறிந்து பிறர் பொருளை கவர நினையாமல் இருக்கும் அறிவுடையாரிடம் செல்வம் சேரும் என்கிறார்.

அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு. - 288


இவ்வாறு, அளவோடு வாழத்தெரிந்த நெஞ்சத்தை அறமென்று சொல்கிறார்,

அளவோடு வாழத்தெரிந்தவர்களிடத்தில் அவர்கள் மேற்கொண்ட அறஉணர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். அளவுக்கு மீறிய வாழ்க்கையால் திருட நினைக்கிறவர்களுடைய மனத்தில் அந்த உணர்ச்சி மறைந்து விடும் என்கிறார்.


அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அ•தும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. - 49


அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே. அதுவும் மற்றவர் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்று என்கிறார் இந்தக்குறளில்,

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற. -34


ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அதுவே அறம, என்ற வகையிலே இந்தக் குறளில் சொல்லியிருக்கிறார்.

அடுத்தாக, அறவினை என்பது கொல்லாமை என்று சொல்கிறவிதமாக,

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும். - 321

என்றும், நல்லாறு (நல்ல வழி) என்பதுவும் கொல்லாமை என்று

நல்ஆறு எனப்படுவது யாதெனின் யாதுஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி. - 324


என்ற குறளில் சொல்கிறார்.
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Sunday, October 23, 2005

அறத்துப்பாலில் செல்வம் ...

பொருட்பால் என்று வைத்து, அதில் செல்வம் பற்றி வள்ளுவர் நிறையப் பேசுகிறார்.

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். -751 (பொருட்பால்)



செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எ•கதனிற் கூ¡¢ய தில். -759 (பொருட்பால்)


அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு. 757 (பொருட்பால்)



அதே சமயத்தில் அறத்துப்பாலிலும் செல்வம் பற்றி பேசுகிறார். சில டிப்ஸ் கொடுக்கின்றார். அப்படி செல்வம் பற்றி வள்ளுவர் அறத்துப்பாலில் என்னதான் சொல்கிறார்?

அ•காமை செல்வத்திற்கு யாதெனின் வெ•காமை
வேண்டும் பிறன்கைப் பொருள். - 178.


செல்வம் குறையாமல் இருக்கவேண்டுமானால், மற்றவரின் பொருளைக் கவர நினைக்கக்கூடாது என்கிறார். அதே அதிகாரத்தில்,

அறனறிந்து வெ•கா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. - 179.


மற்றவர் பொருளை அறத்தினை உணர்ந்து கவர நினைக்காதவரிடம் செல்வம், தானே போய்ச் சேரும் என்கிறார்.

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. - 31.


அறமானது, சிறப்பினைத் தருவதோடு செல்வமும் தரும் என்கிறார்.

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்று வந்த பொருள். -754 (பொருட்பால்)



செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. - 112.


நடுவுநிலையோடு இருக்கக்கூடிய ஒருவனுக்கு, அவனுடைய செல்வம் அவனுடைய கடைசி காலம்வரை சிதைவில்லாமல் இருந்து பலனளிக்கும்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். -84


விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சியோடு உபசரிப்பவனின் வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

அறத்துப்பாலில் வள்ளுவர் அறிந்தவற்றில் சிறந்தது

வள்ளுவர் தான் அறிந்தவற்றில் சிறந்தது என்றவகையில் அறத்துப்பாலில் கூறுபவை இவை,


பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. - 61.


நாம் அடைய வேண்டுமென்று விரும்புகிற செல்வங்களுக்குள் நல்லறிவுடைய குழந்தைகளைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்தது வேறு இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்
வாய்மையின் நல்ல பிற. - 300.


யாம் உண்மையாகக் கண்ட பொருள்களுள் வாய்மையைவிட உயர்ந்தது வேறு ஒன்றுமில்லை.
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

அறத்துப்பாலில், எது இன்பம்?

இன்பத்துப்பால் என்று தனியாக எழுதியிருந்தாலும், வள்ளுவர் வேறுவகையான இன்பங்களைப் பற்றி அறத்துப்பாலில் சொல்கிறார். அந்த இன்பங்களைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

எது இன்பம்?

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. - 65.


தம்முடைய மக்களின் உடலைத் தொடுதல் உடலுக்கு இன்பம் தருவதாகும். அம்மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் தருவதாகும்.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. - 39.


அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். - 228.


தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் வன் கண்மை உடையவர் பிறருக்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ?

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும். - 98.


இனிமையான சொற்களையே பேசினால் அது இம்மை மறுமை இரண்டுக்கும் இன்பம் தருவதாக அமையும்.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. - 94.


யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்கு துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. - 75.


உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசுஅறு காட்சி யவர்க்கு. - 352.


மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம்மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்பநிலையைக் கொடுக்கும்.

இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். - 369.


அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாத துன்பம் கெடுமானால் இவ்வுலகிலும் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

சிற்றின்பம் வெ•கி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். - 173.


அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர் நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். - 156.


தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் மட்டும் இன்பம். ஆனால், பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரையில் புகழ் உண்டு.
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

இவைகளை மறக்காதீங்க! - அவைகளை மறந்துவிடுங்க!

மறக்காதீங்க! மறக்காதீங்க! மறக்காதீங்க!
இப்படி மறக்காதீங்க! என்று சிலவற்றையும்

மறந்து விடுங்க! மறந்து விடுங்க! மறந்து விடுங்க!
இப்படி மறந்து விடுங்க! என்று சிலவற்றையும் சில குறள்களில் வள்ளுவர் சொல்லியிருக்கிறார். அப்படி எவைகளைத்தான் சொல்கிறார்?

அந்தக்குறள்களையும் கவனிப்போம் வாங்க.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. -204


பிறருக்குக் கேட்டைத்தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் நினைக்கக்கூடாது. அப்படி நினைத்தானேயானால், அவனுக்கு அறம் கேடு நினைக்கும்.

அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. -32


ஒருவருக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை. அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை என்கிறார்.


மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. -106


குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்காதீங்க! துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விட்டு விடாதீங்க! என்கிறார்.. அதே அதிகாரத்தில் இன்னொரு குறளில்,

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. - 108.


ஒருவர் முன் செய்த நன்மையை மறப்பது அறம் ஆகாது. அவர் செய்த தீமையை செய்த அப்பொழுதே மறந்து விடுவது நல்லது என்கிறார். இப்படி தீமைகளை மறக்கச் சொன்னவர் இன்னும் சிலதையும் மறக்கச் சொல்கிறார்.


பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. - 152.


வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும். அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல் அதனினும் நல்லது என்கிறார். இன்னொரு குறளில்,


மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். - 303.


யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்துவிட வேண்டும். தீமையான வினைகள் அந்தச் சினத்தாலே ஏற்படும் என்கிறார்.
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

அறத்துப்பாலில் அறிவு

அறிவு அறத்திற்கு எவ்வாறு உதவுகிறது? அறிவு பற்றி அறத்துப்பாலில் சில குறள்களில் வள்ளுவர் சொல்கிறார்.

அறிவினிலே தலையான அறிவு என்ன என்று இந்தக்குறளில்,

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். - 203.


என்கிறார். தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை எல்லாவகை அறிவிலும் தலையான அறிவு என்கிறார்.

சரி. அறிவினால் என்ன பயன் ? இன்னாசெய்யாமை அதிகாரத்தில்,

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை. - 315.


மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன்தான் என்ன? என்று கேட்கிறார். அதே அதிகாரத்தில் இன்னொரு குறளில்,

தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல். - 318.


தன் உயிர்க்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், மற்ற உயிர்களுக்கு அத்துன்பங்களைச் செய்தல் என்ன காரணத்தாலோ?


இதே போல, வெ•காமை என்ற அதிகாரத்தில்,

அ•கி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெ•கி வெறிய செயின். - 175.


யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் என்ன பயன்? என்கிறார் வள்ளுவர்.


அறிவுடையவர்கள் எப்படி இருப்பார்கள்?

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். - 198.


அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

அறத்துப்பாலில் மனித உயிர் பற்றி...

இந்த ஊரில், safty first, saftey is our #1 priority, என்று சொல்லுவார்கள். அதோடு மட்டுமல்லாமல், எந்த அளவுக்கு உயிருக்கு மதிப்பு கொடுக்கிறார்கள் என்றும் நமக்குத் தெரியும். அறத்துப்பாலில் வள்ளுவர் உயிர் பற்றி என்ன சொல்கிறார்? உயிருக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று பார்ப்போம்.

உயிர் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று சில குறள்களில் சொல்கிறார்.

அன்பின் வழியது உயிர்நிலை அ•திலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. - 80.


அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. - 78.


என்று சொல்லி, உயிர் என்றால் அது அன்புடன்கூடியதாக இருக்க வேண்டும் என்கிறார்.


“தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு”

என்ற ஜேசுதாஸ் பாடிய பாடலை பலரும் ரசித்துக் கேட்டிருப்பீர்கள். அந்தப்பாடலில் ஓருடத்தில் இப்படி வரிகள் வரும்.

“கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி”

பசிக்காகக் கொன்றால் பாவம் இல்லையாம்.
இங்கே வள்ளுவர் எந்தக் கட்சி என்று இந்தக் குறள் வழியாகப் பார்ப்போம்

தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை. - 327.


தன்னுடைய உயிரே போகக்கூடிய நிலையிலும், இன்னொரு உயிரைக் கொல்லாதே என்கிறார்.

இப்படியெல்லாம் வாழ்வதாக இருந்தால் உயிரோடு இருக்காதே என்ற வகையில் காட்டமாக சில குறள்களை இயற்றியுள்ளார்.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். - 214.


ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன். மற்றவர்கள் செத்தவர்களாகக் கருதப்படுவார்கள்.


புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கத் தரும். - 183.


கோள் சொல்லிப் பொய்யனாக உயிர் வாழ்வதைவிடச் செத்துப்போவது அறநூல்கள் சொல்லுகிற புண்ணியத்தைத் தரும்.


ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயி¡¢னும் ஓம்பப் படும். - 131.


ஒருவனுக்கு மேன்மை உண்டாக்குவது நல்லநடத்தைதான். அதனால், அதை உயிரைவிடச் சிறந்ததாகப் பாதுகாக்கவேண்டும்.


சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. - 230.


சாவதைவிடத் துன்பமானது வேறொன்றுமில்லை. ஆனால், வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வருகின்றபோது அச்சாதலும் இனியதேயாகும்.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. -309



சினத்தில் அளவுகடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர். சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பானவர்.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. - 82.


என்று விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில் சாவா மருந்தாகிய அமிர்தமே என்றாலும் விருந்தினரை விட்டு தனியே உண்ணாதே என்கிறார். இந்தக் குறள் பரவாயில்லை இந்தத் தொகுப்பில் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறமாதிரியான குறள்.
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

அறத்துப்பாலில் - அறமே செய்யாவிட்டாலும் . . .

இப்படி குறட்பாக்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது வேறு சில குறள்களில், அறமே செய்யாவிட்டாலும் பரவாயில்லை இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யாதீர்கள் அல்லது செய்யுங்கள் என்று சில காரிங்களைப்பற்றி சொல்கிறார். அந்தக் குறள்கள் என்னவென்று பார்ப்போமா?

இங்கே வள்ளுவர் சொல்லும் காரியங்களும் அறம்தான். ஆனால், இக்காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே இப்படிச் சொல்லியிருக்கிறார் என்றே கருதுகிறேன். ஆனாலும், இக்குறட்பாக்களை வித்தியாசமான சுவையுடன் நோக்க “அறம் செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஆனால் இதைச் செய்யாதீர்கள்” என்ற கண்ணோட்டத்துடனே பார்ப்போம்.

பிறன்மனை விழையாமை என்ற அதிகாரத்தில்,


அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. - 150
(திருக்குறள்)

என்று சொல்கிறார். இதேபோல, அறம் செய்யவில்லை என்றாலும்,


புறங்கூறாதீங்க
கோள்மூட்டாதீங்க
வேட்டு வைக்காதீங்க
காலை வாராதீங்க
போட்டுக்கொடுக்காதீங்க
வத்தி வைக்காதீங்க

என்று புறங்கூறாமை அதிகாரத்தில்,

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. - 181
(திருக்குறள்)

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. - 182
(திருக்குறள்)

இன்னொரு குறளில்,

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. - 297
(திருக்குறள்)

என்று சொல்லி, அறம் செய்யாவிட்டாலும் வாய்மையுடன் இருங்கள் என்கின்றார். இப்படி அறத்தைப் பின்தள்ளி வாய்மையை முன் வைத்த வள்ளுவர் இன்னொரு குறளிலே இந்த வாய்மையையே இரண்டாமிடத்திற்குத் தள்ளுகிறார். அப்படி எதைத்தான் வாய்மையைவிடச் சிறந்தது என்று சொல்கிறார்? அந்தக் குறளைப்பார்ப்போம்

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. 323
(திருக்குறள்)

கொல்லாமையைக் கடைபிடியுங்கள். அதோடு அடுத்ததாக வாய்மையினைக் கடைபிடியுங்கள் என்கின்றார்.

பரவாயில்லை! இந்தத் தொகுப்புடனேயே இதையும் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறபடியான குறளும் ஒன்று உண்டு. அது,

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. - 222
(திருக்குறள்)

இங்கு நல்லாறு என்பதை அறவழி என்று எடுத்துக்கொண்டு, நல்லவழியென்றாலும், இரந்து நிற்காதீர்கள். மேலுலகம் இல்லையென்றாலும் ஈதல் நல்லது என்கின்றார். இங்கு ஒரு முரண்பாடு காணப்படுகிறது. இரந்து நின்று எதையும் வாங்காதீங்க என்கிறார். பிறகு, கொடுத்துக்கொண்டிருங்கள் என்றும் சொல்கிறார். வாங்குபவர்கள் இருந்தால்தானே கொடுக்க முடியும். இதற்கு வள்ளுவர் பதிலும் வைத்திருக்கிறார். அது அறத்துப்பாலில் கிடையாது. பொருட்பாலில் இரவு மற்றும் இரவச்சம் என்று இரு அதிகாரங்கள் வைத்து இருக்கிறார். இப்பொழுது அது பற்றி ஆராயாமல், நாம் அடுத்த தொகுப்புக்குப் போகலாம்.

( valluavar - kural - thirukkural )
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Saturday, October 01, 2005

ஊழ்

வாஷிங்டன் வட்டாரத்தில், 25 செப்டம்பர் 2005ல் நடந்த திருக்குறள் ஆய்வுக்கூட்டத்தில், அறத்துப்பாலின் கடைசி அத்தியாயமான ஊழ் அலசப்பட்டது. அப்போது அன்பர்கள் தெரிவித்த கருத்துக்களில் சில இங்கே உங்கள் பார்வைக்கு.

இந்த அதிகாரத்திலே வினை என்ற சொல்லே கிடையாது.

முற்பிறவி என்ற சொல்லும் கிடையாது.

அதனால், ஊழ் என்ற சொல்லுக்கு உலகச்சூழ்நிலை, உலகமுறை, உலகியலின் இயற்கை நிகழ்ச்சி என்ற வகையிலே பொருள் கொண்டால் சிறப்பாக அமைகிறது.

வள்ளுவர் இந்த ஊழ் என்ற சொல்லினை வேறு குறள்களிலும் உபயோகப்படுத்தியுள்ளார்.

இணர் ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரை யாதார் (குறள் 650)

இங்கு வள்ளுவர் ஊழ்த்தும் என்ற சொல்லை "இயற்கையாக மலரும்" என்ற பொருள் கொண்டு பயன்படுத்தியிருக்கிறார். இது ஊழ் என்றால் உலகமுறை என்று பொருள் கொள்வதற்கு மற்றொரு சான்றாக அமைகிறது.

ஊழ் என்பதற்கு சில உரையாசிரியர்கள் கொடுத்த விளக்கங்கள் கீழே,

ஊழாவது முன்பு செய்தவினை பின்பு விளையும் முறை
- மணக்குடவர்

அஃதாவது, இருவினைப்பயன் செய்தவனையே சென்று அடைவதற்கு ஏதுவாகிய நியதி. ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருள் கொண்ட சொற்கள்.
- பரிமேலழகர்.

ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் "Fate, Destiny" என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

ஊழ் என்பது பழைய வினைகளின் பயன். அதாவது முற்பிறப்புகளில் செய்த நல்வினை தீவினைகளின் பயன்.
- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை

ஊழ் முறைமை; உலகியல் நிகழும் முறைமை; உலகியலின் இயற்கை நிகழ்ச்சி
-புலவர் குழந்தை

ஊழ் என்னும் சொல்லுக்கு முறை என்பது பொருள். அம்முறையாவது உலகமுறை அல்லது உலகச் சூழ்நிலை
-முனைவர் வ. சுப. மாணிக்கனார்

ஆகூஊழால் தோன்றும் அசைவுஇன்மை கைப்பொருள்
போகுஊழால் தோன்றும் மடி (குறள் 371)

இந்த முதல் குறளுக்குப் பொருள் கொள்ளும் பொழுது,

நல்ல சூழ்நிலை இருக்கும் பொழுது மனிதன் சுறுசுறுப்பாக இருக்கிறான். அதுவே மோசமான சுழ்நிலையாக இருந்தால் சோம்பேறியாக இருக்கிறான். ஆகவே, சில சமயங்களில் சோம்பேறித்தனமாக இருப்பது என்பது இயல்பானது. ஆனால், இந்த குறளையே பிடித்துக்கொண்டு தலைவிதி என்று உட்கார்ந்து கொண்டிருப்பது சரியல்ல என்று சொல்லுவதற்காகவே, ஆள்வினையுடைமையில்,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் (குறள் 620)

என்று சொல்லி மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்கிறவர்கள் ஊழை வென்று விட முடியும் என்கிறார்.

ஊழ் அதிகாரமும், மேற்சொன்ன குறளும் முரணான குறட்பாக்கள் அல்ல, ஊழ் என்பதற்கு பொருளைத் தெளிவு படுத்தும் பாக்கள்.

தலைவிதியினை மட்டுமல்ல, வருணாசிரம தருமத்தையும் வள்ளுவர் எங்கேயும் வலியுறுத்தவில்லை.

குறளை எப்படி பிரித்துப் படிக்கவேண்டும் என்பதற்கு ஏதாவது ஒரு பொது விதி இருக்கிறதா? என்ற அன்பர் ஒருவரது கேள்வியும் அலசப்பட்டது.

பொதுவான ஒரு விதி என்கின்ற வகையில் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், குறள் வெண்பா இலக்கணத்துக்காக அபூர்வமாக சிலசமயங்களில் வார்த்தைகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கும். இது சில குறட்பாக்களுக்கு மட்டுமே பொருந்தும். அக்குறட்பாக்களை மட்டும் வித்தியாசமாக பிரித்துப் படிக்க வேண்டியிருக்கும்.

ஆனால், மற்ற குறள்களை உரையாசிரியர்கள் பொருள் கொள்வதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் பிரித்து பொருள் காண்கிறார்கள். மற்றபடி குறளைப் பிரித்துப் படிப்பதற்கு பொதுவான முறை இருப்பதாகத் தெரியவில்லை என்றே விடை காண்ப்பட்டது.

இதைப் படித்துக்கொண்டிருக்கும் அன்பரே! உங்களுக்கு ஏதாகிலும் இது பற்றிய நல்ல கருத்து இருந்தால், அன்புடன் உங்கள் கருத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். இது மற்றவரும் குறளறிவினை விரிவாக்கிக் கொள்ள வழி வகுக்கும்.

சில உரையாசிரியர்கள் தங்கள் கருத்துக்கு குறளை இழுக்க வேண்டுமென வேறு வகையில் பதம் பிரித்து பொருள்கொள்ள முற்பட்டிருக்கின்றனர் என்றவாறும் கருத்து சொல்லப்பட்டது.

போனபிறவியிலே செய்த பாவங்களினால்தான் ஒருவன் இப்பிறவியில் அல்லல்படுகிறான் என்ற பொருள்படும்படியான உரையெழுதும் உரையாசிரியர்கள் கருத்து பலரால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

அது மட்டுமல்லாமல், அப்படிப் பேசுவதில் ஒரு சூழ்ச்சியும் அடங்கியிருப்பதான கருத்தும் வெளிப்பட்டது. ஒருவனுடைய முன்னேற்றத்தினையும், முன்னேற முயற்சிப்பதற்கான முயற்சியினையும் தடுக்கும் விதமாக இக்கருத்து இருப்பதாக அமைகிறது.

இன்னொரு குறளில், நல்ல சூழ்நிலையில் அறிவு வளரும், மோசமான சூழ்நிலையில் அறிவு மழுங்கும் என்கிறார் வள்ளுவர்.


நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும். (குறள் 373)

என்னதான் பல நுண்ணிய நூல்கள் படித்திருந்தாலும், ஒருவனுக்கு தன்னுடைய இயல்பான அறிவே குறிப்பிட்ட சூழ்நிலையில் முன்னால் நிற்கும் என்று வள்ளுவர் சொல்கிறார்.

எடுத்துக்காட்டாக, நாம் அனைவரும் தேர்வு எழுதச்சென்றிருப்போம். எழுதி முடித்து தேர்வு அறையைவிட்டு வெளியே வந்த பிறகு, வினாத்தாளைப் பார்த்தோமானால், "அட! இந்த வினாவிற்கு விடையெழுதாமல் விட்டுவிட்டோமே! இதற்கு நன்றாக விடை தெரியுமே!" என்ற அனுபவம் பெரும்பாலோர்க்கு இருந்திருக்கும். இந்த அனுபவத்தையும் இக்குறளுடன் பொருத்திப்பார்க்க முடிமென்றே கருதுகிறேன்.


மேலும், "நுண்ணிய நூல்கள் பல" என்று வள்ளுவர் சொல்கிறார். 2000ம் ஆண்டுகளுக்கு முன்னரே பல நுண்ணிய நூல்கள் தமிழகத்தில் இருந்திருக்கின்றன என்பதனை எடுத்துச் சொல்வதாக இது அமைந்திருக்கிறது. அந்த அனைத்து நுண்ணிய நூல்களும் நமக்கு இன்று கிடைத்திருக்கிறதா என்பது பெரிய கேள்வி.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு (குறள் 374)

என்ற குறளில், செல்வந்தராக இருப்பதற்குரிய வழி வேறு. அறிவாளியாக இருப்பதற்குரிய வழி வேறு என்கின்றார்.

Forbes இதழில், அமெரிக்காவின் பணக்காரர்களை வரிசைப்படுத்தியிருந்தார்கள். அதில் முதல் ஐந்து பேர்களை எடுத்துக் கொண்டால், அதில் நான்கு பேர்கள் கல்லூரிப் படிப்பை முடிக்காதவர்கள். Paul Allen மட்டுமே MBA முடித்தவர்.

Gates, William Henry III
Buffett, Warren Edward
Allen, Paul Gardnerinvestments
Dell, Michael
Ellison, Lawrence Joseph


அதே சமயத்தில், ஒருவரிடம் அறிவும், செல்வமும் சேர்ந்து இருக்காது என்ற வகையிலே வள்ளுவர் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. செல்வந்தர் மற்றும் தெள்ளியர் ஆவதற்குரிய குணாதிசியங்கள் வேறு வேறு என்று மட்டுமே சொல்கிறார். இந்த இரண்டும் ஒருவரிடத்தில் இருப்பதற்குரிய வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

பெரிய செல்வந்தரானவர்களுக்கு எப்படி செல்வத்தை வைத்து செல்வம் திரட்டலாம் என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.

நம்மைப் போன்றோர் மேற்சொன்ன செல்வந்தர்கள் போல் முயற்சிக்காமல் இருப்பதற்கு பலகாரணங்களில் ஒரு காரணம் துணிச்சல் இல்லாமையே. 5000 டாலர் நம்மிடம் அதிகமிருந்து, அதை தொழிலோ, பங்குச் சந்தையிலோ முதலீடு செய்யலாம் என்று எண்ணினால், துணைவியார் "எதுக்குங்க அந்த risk? நகையாக வாங்கிப்போட்டாலவது சேமிப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்" என்பார்கள் என்று சொன்னார் அன்பர் ஒருவர்.

வியாபாரம் என்றாலே ஏமாற்றுதல் என்கின்ற அளவிலே மக்கள் மத்தியில் ஒர் கருத்து இருக்கத்தான் செய்கின்றது. இது முழுமையான உண்மை கிடையாது. நேர்மையாகவும், நியாயமாகவும் வியாபாரம் செய்ய முடியும். ஆனால், நடைமுறையில் வியாபாரத்தில் ஏமாற்றுதல் என்பது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு (குறள் 375)

ஒரு கோணத்தில் பார்க்கும் பொழுது, நாட்டில் நோய் இருப்பது நல்ல விஷயம் இல்லைதான். அனால், மருந்து வியாபாரம் செய்பவர்களும், மருத்துவ வியாபாரம் (சேவையாக எண்ணாதவர்கள் மட்டும்) செய்பவர்களும் செல்வம் சேர்க்க அதுதான் வழி வகுக்கிறது.

நோய் தீயதானாலும், ஒரு சிலருக்கு நன்மைபயக்கிறது.

அதேபோல், கட்ரீனா மற்றும் ரீடா புயல்களினால், எரிபொருள் விலை உயர்ந்தது தீயதுதான். ஆனால், பல எரிபொருள் நிறுவனத்திற்கு இது ஒரு செல்வம் சேர்க்கும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. கட்டடம் கட்டும் நிறுவனங்களுக்கும் இது செல்வம் சேர்க்கும் நன்மையாகிவிட்டது.

மற்றொரு உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடந்தால் அங்கு வேலை செய்பவர்களுக்கு அது தீமைதான். ஆனால், பங்கு சந்தையில் அந்நிறுவனத்தின் பங்கு உயர்ந்து பங்குதாரர்களுக்கு நன்மையளிக்கிறது.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (குறள் 377)

இக்குறளில், வகுத்தான் என்பதற்கு இறைவன் என்று பொருள் கொண்டால் உரை எழுதுவது எளிதாகிறது. இறைவன் விதித்தபடிதான் நாம் அனுபவிக்க முடியும் என்று பொருள் கொள்ளலாம். ஆனாலும், இந்த அதிகாரத்தில், இறைவன் என்று பொருள் கொள்வது சரியாக இருப்பதாகத் தெரியவில்லை.

அதே நேரத்தில், இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்தவகுத்தலுமான அரசன் என்று பொருள் கொண்டாலும் உரை எளிதாகிறது. ஆனால், இதுவும் முழு மனநிறைவைத் தருவதாக இல்லை.

திருக்குறள் முனுசாமி அவர்கள் சொன்ன உரை திருப்திகரமாக இருந்தது.

காமம் என்பது உணர்ச்சி. காமன் என்பது உருவகம்.
"நிலமென்னும் நல்லாள் நகும்" என்று வள்ளுவர் நிலத்தை "நல்லாள்" என்று உருவகப்படுத்தியுள்ளார்.

இது போலவே, ஊழ் என்பதை உருவகப்படுத்தி "வகுத்தான்" என்றே வள்ளுவர் சொல்லியிருப்பார் என்பது பொருத்தமாக அமைந்திருப்பதாகப்பட்டது.

துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால்
ஊட்டா கழியும் எனின்

இந்தக் குறளுக்கு பல உரையாசிரியர்களும், அன்பர்களும் பலவிதமான் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். எனக்கு மனதுக்கு சரியெனப்பட்டது இது. ஊழின் பெருவலியால், விரும்பிய பொருட்களும், அடிப்படைப் பொருட்களும் கிடைக்காமல் போகும் எனின், பொருளில்லாதார் துறவியாக மாறக்கூடும்.

மற்றொரு வகையில் சொன்னால், துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ண்மே எளிதானது அல்ல. அத்தகைய எண்ணத்தைக் கொண்டில்லாதாரும், துறவறம் மேற்கொள்ளும்படியான் நிலையினை ஏற்படுத்துவது ஊழ்.

(valluvar - kural - thirukkural)


-நித்தில்
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Tuesday, September 13, 2005

சின்ன சின்ன ஆசை . . . சரியா? (தொடர்ச்சி)

தூய்மை என்பது அவா இன்மை. அத்தூய்மை வேண்டுமெனில் வாய்மையுடன் இருக்க வேண்டுமென்று வள்ளுவர் அடுத்த குறளில் கூறுகிறார்.

இப்படி வாய்மை பற்றி பேசும் பொழுது அரிச்சந்திரன் பற்றி பேச்சு எழுந்தது. அரிச்சந்திரன் ஒரு வேளை வள்ளுவர் வழியில், பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின், என்கிறபடியாக நடந்திருந்தால் சந்திரமதி கஷ்டப்பட்டிருக்கமாட்டாளோ என்று தோன்றியது.

அடுத்த குறளில், அறவழியில் நடக்க வேண்டுமென்றால் ஆசைக்கு அச்சப்படு என்கின்றார். இதே போன்ற கருத்தை அறிவுடைமை அதிகாரத்தில் ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ என்றும் சொல்கிறார்.

அடுத்த குறளின் பொருளான ‘அவாவினை முழுவதுமாக விலக்கினால் தவறாமல் நல்லவினை நாம் விரும்பிய வழியிலே வரும்’ என்பதனைப் பொருள் கொள்ளும்பொழுது சிறிது குழப்பம் ஏற்பட்டது.

அப்போது அன்பர் ஒருவர்,
இப்படி பல உரையாசிரியர்கள் பல வகையில் உரையெழுதுவதால் நாம் அதைப் படித்துக் குழம்புகிறோம். இதனைத் தவிர்த்திருக்க வள்ளுவரே விளக்கமாக ஒரு ஸ்டடி கைடு போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், ஒரு வேளை அப்படி அவர் செய்திருந்தாரேயானல், இந்நேரத்தில் அவர் விளக்கம் பிடிக்காமல் யாரேனும் குறளை அழித்து நமக்குக் கிடைக்காமல் செய்திருப்பர். குறளின் பொதுத்தன்மைதான் அதனை இவ்வளவு காலம் காப்பாற்றியிருக்கிறது என்று சொன்னார்.

அடுத்து வருகின்ற குறளில், ஆசையினை துன்பத்துள் துன்பம் என்கிறார். கூட்டத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் வள்ளுவர் பேரின்பம் பற்றித்தான் இந்த அதிகாரத்திலே பேசுகின்றார் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், இப்படி வேடிக்கையாக பேச்சு போனது.

அப்போ வள்ளுவர் இன்பத்துக்கும் ஆசைக்கும் சம்பந்தமேயில்லை என்கிறாரா? எனக்குப் புரியலையே! நான் கார் வாங்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். கார் வாங்கினாத்தானே இன்பம்?

இப்ப பெட்ரோல் விக்கிற விலைக்கு கார் வாங்கினால் துன்பந்தானே? அப்புறம் அதை ஒழுங்காக பராமரிக்க வேண்டும். எல்லாம் சிரமந்தானே?



ஆசையினை வள்ளுவர் கடைசிக் குறளில், அடங்காத இயற்கைத்தன்மை கொண்டது என்கின்றார். அதை அடக்கி விட்டால், பேரா இயற்கை என்ற பேரின்பம் கிட்டும் என்கின்றார்.

சாதாரண மனிதன் ஆசையில்லாமல் வாழ முடியாது. ஆனால், அவன் பேராசை கொள்ளக்கூடாது.

ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்?

கார் வாங்குவது ஆசை. ஆனால் எந்தக் கார் வாங்குகிறோம் என்பதே அது ஆசையா பேராசையா என்பதைத் தீர்மானிக்கிறது.

இந்தியாவில் கார் வாங்க ஆசைப்படுகிறோமா? அல்லது அமெரிக்காவில் கார் வாங்க ஆசைப்படுகிறோமா? என்பதைப் பொறுத்து இருக்கிறது.

நியுயார்க் மன்ஹாட்டனில் கார் வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோமா? அல்லது சிறு நகரங்களில் கார் வைக்க ஆசைப்படுகிறோமா? என்பதைப் பொறுத்து இருக்கிறது.

இப்படி ஆசையென்பது சின்ன ஆசையா? பேராசையா? என்பது இடம், காலம், பொருள் போன்ற விஷயங்களைச் சார்ந்து இருக்கிறது.

வள்ளுவர் துறவிகளுக்கே ஆசையினை அறவே அறுக்க வேண்டுமென்கிறார். ஆனால் சாதாரண மக்கள் பேராசையல்லாத ஆசை கொள்வதில் தவறில்லை என்றவாறு கூட்டத்தில் சொல்லப்பட்டது.

வள்ளுவரே பொருட்பாலில்,

‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்றும்

‘செய்க பொருளை’ என்றும்தானே சொல்கிறார்.


-நித்தில்
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Monday, September 12, 2005

சின்ன சின்ன ஆசை. . . சரியா?

டால்ஸ்டாய் கதை ஒன்றில் ஒருவனுக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தது. காலையில் சூரியன் எழுந்தவுடன் அவன் ஓட ஆரம்பித்து மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்குள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ஓடி, மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கே வந்து சேர்ந்தால், சுற்றிய இடம் முழுவதும் அவன் சொந்தமாக்கிக் கொள்ளலாம். கிடைத்த இந்த வாய்ப்பை நன்கு உபயோகப்படுத்திக்கொள்ள அவன் விரும்பினான். காலை சூரியோதயம் ஆரம்பித்தவுடன் அவன் ஓட ஆரம்பித்தான். ஓடினான் ஓடினான் ஓடிக்கொண்டேயிருந்தான். வெகுதூரம் ஓடிய அவன் மாலைக்குள் திரும்பவேண்டிய காரணத்தால், திரும்பி ஆரம்பித்த இடத்தை அடைய, ஆசை உந்த, ஓடி வரலானான். கடைசியில் மிகச்சரியாக ஆதவன் அஸ்தமிக்கும் நேரத்தில் வந்து சேர்ந்தான். ஆனால் ஆசையின் காரணமாக வெகுதூரம் ஓடிய களைப்பில் அங்கேயே மாரடைப்பால் இறந்தும் போனான்.

இது பேராசைக்குக் கிடைத்த பரிசு.

அளவான ஆசை இருந்திருந்தால் இடமும் கிடைத்திருக்கும், உயிரும் இருந்திருக்கும்.

இன்னொரு சின்னக்கதை.

அந்த ஊரிலே சோம்பேறி என்று பெயர் வாங்கிய ஒருவன் மரத்தடி நிழலில் கால் மேல் கால் போட்டு ஆட்டிக்கொண்டு படுத்திருந்தான். அங்கு வந்த பெரியவர் ஒருவர் அவனைப்பார்த்து அறிவுரை சொல்லலானார்.

தம்பி! இப்படி படுத்துக் கிடக்கிறாயே? ஒரு வேலை கீலை செய்யக்கூடாதா?

வேலை செய்தால் என்னங்க கிடைக்கும்?

என்னப்பா இப்படிக் கேட்கிறே. நல்ல சம்பளம் கிடைக்கும்.

நல்ல சம்பளம் கிடைத்தால் ?

நல்ல வீடு வாங்கலாம்.

நல்ல வீடு வாங்கினால் ?

நாலு பேர் பார்த்து உனக்குப் பெண் தருவார்கள். கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம்.

கல்யாணம் பண்ணினால்?

குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். குழந்தைகள் வளர்வார்கள்.

குழந்தைகள் வளர்ந்தால்?

பெரியவர்களாகி உன்னைக் கவனித்துக்கொள்வார்கள். நீ கால் மேல் கால் போட்டு ஓய்வாக அனுபவிக்கலாம்.

அதைத்தானே இப்போ செய்துகொண்டு இருக்கிறேன்! என்றான் அந்தச் சோம்பேறி.

ஆசை(அவா) கூடாது என்று ‘அவா அறுத்தல்’ என்ற அதிகாரத்திலே சொல்லியிருக்கிற வள்ளுவர், நம்மை மேற்சொன்ன கதையில் வந்தவனைப்போல் சோம்பேறியாகச் சொல்கிறாரா?

11 செப்டம்பர் 2005ல் வாஷிங்டன் வட்டாரத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் இடையிடையே சொல்லப்பட்ட கதைகள் இவை. வள்ளுவர் ‘அவா அறுத்தல்’ பற்றி என்னதான் சொல்கிறார் என்று பல்வேறு உரையாசிரியர்களின் உரைகளோடு கூட்டத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் அலசும் பொழுது சொன்ன சுவையான கருத்துக்களில் சிலவற்றை இங்கு பகிர்கிறேன்.

முந்தைய அதிகாரம் மெய்யுணர்தல் பற்றியது. மெய்யுணர்தலுக்குப் பின் அவாஅறுத்தல் தேவையா? ஏன் மெய்யுணர்தலுக்குப் பின் இவ்வதிகாரம் வைக்கப்பட்டுள்ளது?

மெய்யுணர்ந்த பின்னருங்கூட அவா வருவதற்கான் வாய்ப்பு இருக்கிறபடியால், மெய்யுணர்தல் அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது.

துறவறவியலில் வைக்கப்பட்டுள்ள அதிகாரமாக இருப்பதால், இது துறவிகளுக்காகச் சொல்லப்பட்ட அதிகாரம் என்றிருந்தாலும், சாதாரண மக்கள் எந்தவகையில் பயனடையமுடியும் என்ற வகையிலேயே ஆய்வு நடந்தது.

அவா என்றால் என்ன? என்ற அடிப்படையான கேள்வி எல்லாருடைய மனதிலும் எழுந்தது.

துறவிகளுக்கு ‘அவா’ என்றால் ‘ஆசை’ என்று பொருள் கொண்டால், சாதாரண மக்களுக்கு ‘பேராசை’ என்று பொருள் கொள்ள வேண்டும் என்ற கருத்து எழுந்தது. ஏனென்றால் ஆசையில்லாமல் மனிதன் வாழ முடியாது.

ஒரு உரையாசிரியர், அவா அறுத்தல் என்றால் ‘நிலையில்லாத, பொய்யான பொருள்கள் மேல் ஆசையைத் தவிர்த்தல்’ என்று சொல்கிறார்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. - (திருக்குறள்)

இந்தக் குறளில் வள்ளுவர், ஆசை எல்லா உயிர்க்கும் எப்பொழுதும் தவறாமல் மறுபிறப்பை தருகின்ற விதையாக இருக்கிறது என்று சொல்கிறார்.

மறுபிறப்பினைப் பற்றி வள்ளுவர் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். வள்ளுவர் இப்படிச் சொல்லுவது சரியா என்பது ஒருபுறமிருக்க, பகுத்தறிவுவாத உரையாசிரியர்கள் வள்ளுவர் மறுபிறப்பு என்று சொல்லவில்லை என்பது போல் மழுப்பியிருப்பது ஏற்புடையது அல்ல என்ற கருத்து பலமாக எழுந்தது.

வள்ளுவர் காலத்தில் இருந்த, நமக்குத் தெரிந்த, மதங்கள் மூன்று.

1. இந்து மதம் என்ற பெயரில்லாவிட்டாலும் (பிராமண மதம் அல்லது வைதீக மதம்) மற்றொருபெயரிலிருந்த இந்து மதம்.

2. பவுத்த மதம்

3. சமண மதம் (ஜைன மதம்)


இவ்வனைத்து மதங்களிலும் மறுபிறப்பு என்ற கருத்து இருந்தபடியால், அதிலிருந்து உள்வாங்கி வள்ளுவர் மறுபிறப்புப் பற்றி சொல்லியிருக்கின்றார் என்று அன்பர்கள் சொன்னார்கள்.

வள்ளுவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று குறளின் வழியாகத் தெரிந்து கொள்ள முடியாத வகையிலே அமைத்திருந்ததனாலேயே குறள் இன்று வரை வாழ்ந்துகொண்டிருக்கிறது.

வள்ளுவரின் மறுபிறப்புக் கருத்து இன்றைய காலகட்டத்தில் ஏற்கக்கூடிய ஒன்றா? என்ற கேள்வி கூட்டம் நடந்த அறையின் ஒரு ஓரத்தில் கடைசிவரை நின்று கொண்டேயிருந்தது.

‘எல்லா உயிர்க்கும்’ என்று வள்ளுவர் சொன்னது ஆடு, மாடு போன்ற உயிரினங்களுக்கும் பொருந்துமா? என்று ஒருவர் கேட்டார்.

வள்ளுவர் மற்றொரு இடத்தில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொல்லும் பொழுது மனிதர்களை மட்டுமே குறிப்பிடுகிறார். அது மட்டுமல்லாமல் இந்த துறவறவியல் மனிதர்களுக்கு மட்டுமே பொருந்துவதால் இங்கு ‘எல்லா உயிர்க்கும்’ என்பதை ‘எல்லா மனிதர்களுக்கும்’ என்றே பொருள் காணவேண்டும் என்று விடை காணப்பட்டது.

அடுத்து வருகின்ற குறளில் வள்ளுவர் ‘வேண்டாமை’ ஒரு சிறந்த செல்வம் என்று சொல்கிறார். அப்பொழுது அன்பர் ஒருவர், மாணிக்கவாசகர் இறைவனிடம் தன் வேண்டுதலைக் குறிப்பிடும் பாடலைப் பாடி பொருளும் சொன்னார்.

வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்டமுழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே.


பொருள்:

இறைவா!
நான் வேண்டுவது நீ அறிவாய்.
வேண்டியது அனைத்தும் நீ தருவாய்.
வேண்டுகின்ற அயனுக்கும் மாலுக்கும் அரியவனாவாய்.
என்னை நீ ஆட்கொண்டாய்.
நான் உன்னை அருள் செய்ய வேண்டி கேட்டதால் அருள் செய்தாய்.
உன்னிடம் ஆசையாக பரிசு என்ன கேட்கப்போகிறேன் என்று என்னைக் கேட்பாயானால், அதுவும் உன்னுடைய விருப்பந்தானே!


(தொடரும்...)

-நித்தில்
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Tuesday, August 30, 2005

மெய்யுணர்தல்

வாஷிங்டன் வட்டாரத்தில் ஆகஸ்டு 27, 2005ல் நடந்த திருக்குறள் ஆய்வுக்கூட்டம் மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தை பல உரையாசிரியர்களின் உரைகளோடு அலசியது. அப்போது அங்கிருந்த பல்துறை வல்லுனர்கள்் தெரிவித்த கருத்துக்கள் பற்றி எழுதுகிறேன்.

உணர்தல் வேறு அறிதல் வேறு. அறிதல் அறிவினாலே அறியக்கூடியது. பசியைப்பற்றி ஒருவன் அறிந்து கொள்ளலாம். ஆனால் பசித்தால்தான் உள்ளபடியே உணரமுடியும். அதனால் இந்த அதிகாரத்தில் சொல்லப்படுவது மெய்யறிதல் மட்டுமல்ல மெய் உணர்தல்.

இந்த அதிகாரத்தில் மட்டுமே வள்ளுவர் உணர்தல் என்ற வார்த்தையை அதிகாரத்தலைப்பில் உபயோகப்படுத்தியிருக்கிறார். மற்ற இடங்களில் குறிப்பறிதல், காலம் அறிதல், செய்நன்றி அறிதல் என்றவகையிலே 'அறிதல்' என்றே அமைந்திருக்கின்றது.

மற்ற தமிழ் இலக்கிய நூல்களிலும் மெய்யுணர்தல் பற்றி ஆசிரியர்கள் சொல்லும்பொழுது அந்த அனுபவத்தை உணர்தல் என்றே சொல்கிறார்கள். எடுத்துக்காட்டாக, திருவாசகத்தில்,

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணர்வே

என்றும்,

தோற்றச்சுடரொளியாய் சொல்லாத நுண்ணுணர்வாய்

என்றும் மாணிக்கவாசகர் சொல்கிறார்.


இந்த அதிகாரத்திலே மெய்ப்பொருள், செம்பொருள் என்று அஃறிணைப் பொருளாகச் சொல்கிறார்.

கடவுள் வாழ்த்து அதிகாரத்திலே இறைவனைப் பற்றிச் சொல்லும் பொழுது வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமையில்லாதான் என்றெல்லாம் சொன்ன வள்ளுவர் இங்கே அப்படிச் சொல்லவில்லை.

கடவுள் வாழ்த்தில் உயர்திணை. இங்கே அஃறிணை.

ஆனால், உரை எழுதுபவர்கள் மெய்ப்பொருள் என்றால் கடவுள் என்று சொல்லி சுலபமாக முடிக்கவே முயன்றிருக்கின்றனர்.

மெய்ப்பொருள் என்பதனையே நாம் என்னவென்று ஆராய வேண்டும் என்ற கருத்தும் இக்கூட்டத்தில் எழுந்தது.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. -(திருக்குறள்)

வள்ளுவர், மெய்ப்பொருள் பற்றிச் சொல்லும்பொழுது "எது மெய்ப்பொருள்" என்று சொல்லவில்லை. வழக்கம் போல் எது மெய்ப்பொருள் என்று கண்டுபிடித்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டார்.

பல உரையாசிரியர்கள் மெய்யுணர்தல் பற்றிச் சொல்லியிருந்தாலும், திரு எஸ். என். கந்தசாமி என்ற வாழ்ந்துகொண்டு இருக்கின்ற தமிழறிஞர் தன் உரையில் மெய்யுணர்தல் பற்றி சொன்னது ஓரளவு ஏற்புடையதாக இருந்தது. அவர் சொன்னதாவது,

"பொருள்களின் இயல்புகளை ஐயம் திரிபற உள்ளவாறு உணர்ந்து பிறப்பினை நிங்கி வீட்டு இன்பத்தினை எய்துவதற்குரிய வழியினை அறிந்து நடத்தற்கு ஏதுவாகிய தத்துவஞானத்தினை மெய்யுணர்தல் என்பர்"

தத்துவஞானத்தை உணர்வதுதான் மெய்ப்பொருள் என்கின்றார் இவர்.

மெய்ப்பொருள் என்பதனை கடவுள் என்று சொன்னால் உரை எழுத எளிதாகி விடுகிறது.

எப்படி உடற்பயிற்சி செய்யக்கூடிய அனைவரும் தடகள வீரர்களாக மாறவேண்டியதில்லையோ அது போல அறம் சார்ந்து வாழக்கூடிய அனைவரும் துறவறத்தை மேற்கொண்டு மெய்யுணரவேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்தவில்லை என்றும் சொல்லப்பட்டது. துறவறத்தை முழுநேரமாகக் கொண்டிருக்கும் துறவிகளுக்கே இந்த அதிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது.

மெய்யுணர்வு என்று சொல்லக்கூடிய உணர்வினை சிலர் உணர்ந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் மதத்தினைச் சார்ந்தவர்கள் என்று மட்டுமல்லாமல் மதத்தினைச் சாராதவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக மாணிக்கவாசகர், ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைச் சொல்லலாம் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

வெவ்வேறு உரையாசிரியர்கள் “மறுபிறப்பு” என்று வள்ளுவர் சொல்லுவதை எவ்வாறு கையாண்டு இருக்கிறார்கள் என்றும் பார்த்தோம். நாத்திகவாதி உரையாசிரியர்களில் சிலர் மறுபிறப்பை மழுப்பியிருந்தார்கள். சிலர் ஒத்துக்கொண்டு இருந்தார்கள். ஆத்திகவாதிகள் அவர்கள் சேர்ந்த மதம் சார்ந்து விளக்கியிருந்தார்கள்.

இந்த அதிகாரத்தில், இப்படிச் செய்தால் இப்படி ஆகலாம் என்றும், மெய்ப்பொருள் காணவேண்டும் என்றும் வள்ளுவர் சொல்கிறாரேயொழிய இப்படிச் செய்ததால், இப்படி ஆகியிருக்கிறார்கள், இப்படி சிலர் மெய்ப்பொருள் கண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று எங்கேயும் சொல்லியிருக்கக் காணோம்.

வள்ளுவர் சொல்லியிருக்கும் மறுபிறப்பு உண்மையிலுமே உண்டா? மரணத்திற்கு அருகே சென்று வந்தவர்களின் அனுபவம் என்று பலவிதமாக விவாதங்கள் சென்றன. கூட்டத்திற்கு வந்திருந்த இரண்டு மருத்துவர்களிடமும் இக்கேள்விகள் கேட்கப்பட்டன.

மரணத்திற்கு அருகே சென்று வந்தவர்கள், ஒளிவெள்ளத்தைப் பார்த்தாகச் சொல்லுகிறார்களே? என்று கேட்டார் ஒருவர்.

ஆமாம், ஆபரேஷன் தியேட்டரில் அவர்கள் கடைசியாகப் பார்த்தது அந்த அறையிலிருந்த அபரேஷன் லைட்டாகத்தான் இருக்கும். அதுவே அவர்கள் நினைவிலும் இருந்திருக்கும். இருட்டறையில் அந்த மரண அனுபவத்தைப் பெற்றிருந்தால் எப்படியிருந்திருக்குமோ? என்றார் இன்னொருவர்.

மொத்தத்தில், வலுவான எந்த ஒரு சான்றும் இல்லாததால் இந்த மறுபிறப்பு விஷயம் ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது.

-நித்தில்
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

கோவணக்கதை தொடர்ச்சி...

துறவில் பெண்கள் பற்றி வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் என்ற கேள்விக்கு பதில் தேடினோம். ஆண் பெண் என்ற் பாகுபாட்டினை எங்கும் வள்ளுவர் சொல்லியிருக்கவில்லை.

இன்னொரு நண்பர் சொன்னகதை.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொற்பொழிவுகள் ஆற்றுவது, தியானம் செய்வது, பக்தர்களை சந்திப்பது போன்ற பல அலுவல்களுடன் இருப்பார். அந்த அலுவல்களுக்கிடையேயும் சமையலறைக்கு வந்து ‘அடுத்த சமையலுக்கு என்ன செய்யப்போகிறாய்? என்ன செய்திருக்கிறாய்? என்று தன் மனைவியிடம் கேட்டுச் செல்வாராம். இ தைப்பலமுறை கவனித்து வந்த அவரது மனைவி, 'நீங்கள்தான் துறவி ஆயிற்றே, பிறகு ஏன் உணவு விஷயத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள்?’ என்று கேட்டாராம். அதற்கு அவர், “உயிருடன் இருப்பதற்கு ஏதாவது ஒரு விஷயத்திலாவது பற்று இருக்க வேண்டும். என்றைக்கு நான் இப்படி உணவு விஷயத்தில் ஆர்வம் காட்டமல் இருக்கிறேனோ அன்றே நான் அடுத்த நிலை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டேன் என்று பொருள்” என்று சொன்னாராம். பிற்காலத்தில் அவர் உணவு பற்றி ஆர்வம் காட்டாத நாளிலேயே அவரது மனைவி ராமகிருஷ்ணர் வீடுபேறு அடையத் தயாராகி விட்டார் என்று புரிந்து கொண்டாராம்.

-நித்தில்
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Monday, August 15, 2005

கோவணக்கதை

திருக்குறள் ஆய்வுக்கூட்டம் இருவாரங்களுக்கு ஒரு முறை ஞாயிற்றுக்கிழமைகளில் வாஷிங்டன் வட்டாரப்பகுதியில் நடைபெற்று வருகிறது. 14 ஆகஸ்ட் 2005 அன்று 35வது அதிகாரமான “துறவு” ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, இடையிலே சொல்லப்பட்ட கதையிது.

ஒரு ஊரில் ஒரு சாமியார் இருந்து வந்தார். அவரிடம் இரண்டு கோவணங்கள் இருந்தன. ஒன்று இடுப்பில் இருக்கும் பொழுது மற்றொன்று துவைக்கப்பட்டு காய்ந்து கொண்டு இருக்கும். அந்தக் கோவணத்தை எலி கடித்து விடுவதாக ஒரு பக்தரிடம் குறைபட்டுக்கொண்டு இருந்தர். குறை கேட்ட அந்த பக்தர் சாமியாரிடம், ஒரு பூனை வளர்த்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார். அது கேட்ட சாமியார் பூனை வளர்க்கலானார். எலிகளையெல்லாம் வேட்டையாடிவிட்டபடியால் பூனை பசி தாங்காமல் சாமியாரின் பூசை வேளைகளில் மியாவ் மியாவென்று கத்தித் தொந்தரவு செய்து கொண்டு இருந்தது. பூனையின் பசிக்கு பால் கொடுக்க பசு ஒன்றை பக்தர் தானமாகக் கொடுத்தார். அதில் கிடைத்த பாலை பூனைக்கு சாமியார் கொடுத்து வந்தார். பிறகு சிறிது நாளில், பசுவை சமாளிக்க ஒரு பணிப்பெண் வைக்க வேண்டியிருந்தது. பின்னர் குறுகிய காலத்தில் ஹார்மோன்களின் விளையாட்டால் அப்பணிப்பெண்ணை மணந்து சம்சாரியானார்.

கோவண ஆசையால் சாமியார் சம்சாரியான கதை பற்றறுத்தலின் இன்றியமையாமையை துறவு மேற்கொள்வாருக்கு சொல்வதாக இருந்தது.

நமது ஊரில் சாமியார்கள் தண்டம் (கம்பு) வைத்திருப்பதும், அத்தண்டத்தின் மேல் நுனியில் காவி நிறத்தில் ஒரு துணி முடிந்து வைத்திருப்பதையும் செய்திப்படங்களில் பார்த்திருப்போம். அந்தத் துணி வேறொன்றுமில்லை, சாமியாரின் மாற்றுக்கோவணமே என்ற செய்தியினையும் கூட்டத்தில் தெரிந்து கொண்டேன்.


இந்த அதிகாரத்தின் முதல் குறள்,

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் -341

உதடு ஒட்டாத குறள் என்ற சிறப்பினைக் கொண்டது. இது பற்று நீங்கவேண்டும் என்ற காரணத்தால் உதடு ஒட்டாத வகையில் அமைக்கப்பட்டு இருந்தது என்றார்கள்.

கடைசிக் குறள்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. -350 (திருக்குறள்)

இது பற்றற்றான் பற்றினைப் பற்றுக என்பதால், ஒவ்வொரு வார்த்தையும் உதடு ஒட்டும் வகையில் அமைக்கப்பட்டது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.


இங்கு பற்றற்றான் யார்? என்ற கேள்வியும் எழுந்தது. பற்றற்றான், புத்தர், மகாவீரர், ஒரு துறவி அல்லது இறைவன் என்றவகையில் பலரது கருத்துக்கள் இருந்தன.

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை -345 (திருக்குறள்)

என்ற குறள், துறவு மேற்கொள்வோர்க்கு உடம்பும் மிகை அதனால் அவர் எந்தப் பற்றும் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியது.


குறளில் மறுபிறவி பற்றி கருத்துக்கள் இருந்தமையால், மறுபிறவி உண்மையிலுமே உண்டா? என்ற கேள்வியும் எழுந்தது. வேறுபட்ட கருத்துக்கள் ஆரோக்கியமான முறையில் மோதின. சுவையான சில கருத்துக்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன்.

மறுபிறவி என்ற கருத்துக்கு ஏதாகிலும் நல்ல நம்பக்கூடிய வகையில் அறிவியல் சார்ந்த சான்று உண்டா என்ற கேள்விக்கு இக்கூட்டத்தில் விடை கிடைக்கவில்லை.

பரிணாமத்தத்துவம் பற்றியும் மாற்றுக்கருத்துகள் அலசப்பட்டன. இன்றைய நிலையில் பரிணாமத்தத்துவம் அறிவியல் ரீதியாக பொய்ப்பிக்கப்படாத வகையிலேயே இருக்கிறது. இதனை தூக்கி நிறுத்தும் வண்ணமாக பல புதிய சான்றுகள் கிடைத்தவண்ணமாகவே இருக்கிறது.

இன்னும் இரண்டு கதைகள் சொல்லப்பட்டன அதனையும் பகிர்ந்து கொள்றேங்க.


-நித்தில்
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Friday, August 12, 2005

வீடியோ கேம், டீவி நல்லதா?

இன்று மதிய உணவு இடைவேளையில் பக்கத்தில் வாஷிங்டன் யூனியன் ஸ்§டஷனில் உள்ள புத்தகக்கடைக்குச் சென்றேன். அங்கே ஸ்டீபன் ஜான்சன்(Steven Johnson) என்பவர் எழுதியிருந்த "எவ்ரிதிங் பேட் இஸ் குட் ஃபார் யு"(Everything Bad Is Good for You) என்ற புத்தகத்தைப் பார்த்தேன். சில நிமிடங்கள் புரட்டினேன். அப்பொழுது பார்த்த விஷயங்கள் மற்றும் எனக்குத் தோன்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.


இந்த காலத்தில் கெடுதல் என்று சித்தரிக்கப்படும் பல விஷயங்கள் (எடுத்துக்காட்டாக, வீடியோ கேம், டீவி, டிவிடி, சினிமா) ஆகியன இப்போதைய தலைமுறைக்கு அறிவு வளர உதவுகின்றனவா?


வீடியோ கேம்:
வீடியோ கேம் குழந்தைகளின் படிப்பைப் பாதிக்கின்றது. அவர்கள் அறிவை வளராமல் செய்கிறது. புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் குறைக்கிறது. மொத்தத்தில் வீடியோ கேம் நல்லதல்ல என்று ஒரு சாரார் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைய செய்தி ஒன்றில், ¦தன்கொரியாவைச் சேர்ந்த லீ என்னும் 28 வயது இளைஞர் தொடர்ந்து 49 மணி நேரம் ஊண் உறக்கம் இல்லாமல் விடாமல் விளையாடி மயங்கி விழுந்துள்ளார். அவரை அந்த வீடியோ கேம் கடையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். மருத்துவமனையில் சிறுது நேரத்தில் மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டார்கள். அந்த அளவுக்கு அவர் வெறிபிடித்து வீடியோ கேம் விளையாடி இருக்கிறார்.

இந்தச் செய்தி இப்படிப்பட்டா கருத்துள்ளோருக்கு உதவிகரமாகவே அமையும்.

ஆனால், ஸ்டீபன் ஜான்சன் என்பவர் தான் எழுதிய புத்தகத்தில் வீடியோ கேம் தற்போதைய குழந்தைகளுக்கு அறிவு வளர உதவுகிறது என்று சொல்கிறார். குழந்தைகள் வீடியோ கேம் விளையாடும் பொழுது அவர்கள் மூளையின் பெரும்பாலான் பகுதிகள் வேலை செய்கின்றன. முப்பரிமணத்தில் படங்களைப் பார்க்கிறார்கள். கைகளுக்கும் மூளைக்குமான ஒருங்கிணைப்பு நன்கு வளர ஏதுவாகிறது.. குழந்தைகளின் தீர்வுகாணும் திறன் வெகுவாக வளருகிறது என்றவகையில் தன் கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.

வீடியோ கேம் விளையாட்டினால் குழந்தைகளுக்கு நடைமுறைவாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன் அதிகரிக்கிறது என்றும் சொல்கிறார்.

என்னதான் இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது உண்மைதானே!

டீவி:

டீவியில் தமிழ் சானல்களைப்பார்த்து வருடக்கணக்கான எனக்கு தமிழ் சானலை விமர்சிக்கும் தகுதி உண்டா என்பது கேள்வி. ஆனாலும் கேள்வியறிவில் கிடைத்த தகவல்களின்படி தமிழ் மக்களின் அறிவினை அப்படி ஒன்றும் வளர்ப்பதாக அமையவில்லை என்றே அறிகிறேன். சொல்லப்போனால் மக்களின் அறியாமையினையும், மூடநம்பிக்கையினையும் உபயோகப்படுத்தி அதனை இன்னும் மோசமாக்கும் வகையில்தான் அமைந்திருக்கிறது என்பதாகக் கருதுகிறேன்.

இது ஒருபுறமிருக்க, டீவி மக்களைச் சோம்பலாக உட்கார வைக்கிறது. அவர்கள் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் இல்லாமல் தேவையில்லா விஷயங்களைத் திணிக்கும் வண்ணம் உள்ளது. மூளைச்சலவை(brainwash) செய்கிறது. கண்களைக் கெடுக்கிறது. வன்முறை நிறைந்து இருக்கிறது. பாலியல் கவர்ச்சியினை பாழாய்ப் பயன்படுத்துகிறது. படிக்கும் நேரத்தைக் கொல்கிறது. நேரத்தை வீணடிக்கிறது. இது போன்ற கருத்துக்களும் நிலவுகின்றன.

இந்தக் கருத்தை முழுமையாக மறுக்கிறவனாக இல்லை என்றாலும், ஸ்டீபன் ஜான்சன் கருத்துக்களை இங்கே கொடுக்கிறேன். டீவி நிறையக் கருத்துக்களைக் கொடுக்கிறது. நல்ல பேச்சு நிகழ்ச்சிகள் மக்களுக்கு சிந்தனையினைத் தருவதாக அமைகிறது. மோசமான நிகழ்ச்சிகள் ஆங்காங்கே இருந்தாலும், நிகழ்ச்சிகள் பல பயனுள்ளதாக அமைந்துள்ளதோடு, பல தகவல்களைக் கொடுக்கும் நல்ல ஊடகமாக இருக்கிறது என்றும் சொல்கிறார். இன்றைய தலைமுறைக்கு, இன்றைய தகவல் யுகத்தில் தகவல்கள் கொண்டு சேர்க்கும் பணியினைச் சிறப்பாகச் செய்கிறது என்று சொல்லி பற்பல நல்ல அமெரிக்க நிகழ்ச்சிகளை மேற்கோள் காட்டுகிறார். ஆனால், அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தமிழ் சானல்களில் உண்டா? எனக்கு உண்மையிலுமே தெரியாமல்தான் இக்கேள்வியினைக் கேட்கிறேன்.



டிவிடி, சினிமா, வலைதளம்:
இதுபற்றி பிறகு அலசுகிறேன்.

-நித்தில்
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Thursday, August 11, 2005

வாஷிங்டன் பன்னாட்டுத்திருக்குறள் மாநாடு - ஒரு பார்வை

வரலாற்று சிறப்புமிக்க பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ஜூலை 8-10
நடைபெற்றது. இந்த வாரத்தை மேரிலாந்து மாநில கவர்னர் திருக்குறள் வாரமாக அறிவித்திருந்தது தமிழுக்கும்,
குறளுக்கும் பெருமை தருவதாக அமைந்தது.

ஜூலை 8, வெள்ளிக்கிழமை மாலை வாஷிங்டன் முருகன் கோவிலில் உள்ள அரங்கத்தில் வள்ளுவன் சிலை
திறப்பு நடந்ததிலிருந்து மாநாடு களை கட்டத் தொடங்கியது.

ஜூலை 9 சனிக்கிழமை காலை 9:20 மணியளவில் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப்பெண் தமிழ்த்தாய்
வாழ்த்துப்பாட, மாநாடு துவங்கியது. அடுத்து இந்தியக் குடியரசுத்தலைவர் திரு. அப்துல் கலாம்
அவர்களின் ஒளிப் பதிவு செய்யப்பட்ட வாழ்த்துரை திரையிடப்பட்டது, மாநாட்டிற்கு வந்த அனைவருக்கும்
புத்துணர்வையும் உத்வேகத்தையும் தந்தது. அவர் கோட்டிய,

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்

ஆகிய குறள்களும், எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த பணியில் ஈடுபட்டிருந்தாலும், அங்கு முழுமுயற்சியோடு
உழைத்து, வாழும் நாட்டிற்கு முழு மனதுடன் பணிசெய்து நீங்களும் பயனடைய வேண்டும், அந்த நாடும்
பயனடைய வேண்டும் என்பதும் அவர் பேச்சில் முக்கியச் செய்திகளாக் அமைந்தன.

அடுத்து சிறப்பு சொற்பொழிவாளர் முன்னாள் துணைவேந்தர் வ. செ. குழந்தைசாமி அவர்கள் ஆற்றிய
தெள்ளத் தெளிந்த நிரோடை போன்ற சொற்பொழிவு அரங்கத்தில் இருந்த அனைவரது செவிக்கு
சிறந்த விருந்தாக அமைந்திருந்தது. அன்றயதினம் நடந்த சொற்பொழிவுகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே
இருந்ததால் மாநாட்டுக்கு வந்த அனைத்து தரப்பு மக்களும் குறளின் அருமைகளையும், பெருமைகளையும்
அறிய வாய்ப்பளித்தது. குறிப்பாக வெளிநாட்டு வாழ் தமிழ் வம்சாவழிக் குழந்தைகள் பயனடைந்தனர்.

திருக்குறள் மதசார்பற்றது என்று மட்டுமே எண்ணியிருந்த பலருக்கு, திரு. வ. செ. குழந்தைசாமி அவர்கள்
குறளில் மதம் மட்டுமல்ல, பலமுறை மொழி, நாடு, அரசன், வற்றாத ஆறு பற்றி குறிப்பிடும்பொழுதும் எந்த
மொழியினையோ, நாட்டினையோ, அரசனையோ, ஆற்றினையோ குறிப்பாக குறிப்பிடவில்லை என்பது
குறள் உலகப் பொதுமறை என்பதற்கு சான்றாக அமைந்திருக்கிறது என்றார்.

சுமார் 260 ஆய்வுக்கட்டுரைகள் இம்மாநாட்டிற்காக சமர்பிக்கப்பட்டன. அவற்றில், 40 கட்டுரைகள் சிறந்த
ஆய்வாளர்களால், மாநாட்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன். தேர்ந்தெடுக்கப்பட்ட 40 கட்டுரைகளில்
சுமார் 15 கட்டுரைகள் மாநாட்டில் கட்டுரை ஆசிரியர்களால் உரைக்கப்பட்டன.

பல தலைப்புக்களிலும், பல கோணங்களிலும், பலதரப்பட்ட, பலநாட்டு அறிஞர்களுடன் குறளையும் வள்ளுவனையும்
ஒப்பிட்டு அலசப்பட்டன். கலிபோர்னியா மாநிலத்தில் பெர்க்லி பல்கலைகழகத்தின் தமிழ்துறையின்
தலைமை பொறுப்பில் இருக்கும் ஜார்ஜ் ஹார்ட், அவர்கள் நடத்திய " திருக்குறள் இன்றைக்கும்
பொருந்துமா?" என்ற தலைப்பில் நடத்திய விவாத மேடை திருக்குறள் ஏன் இன்றும் போற்றப்படுகிறது
என்பதனை தெளிவாக விளக்கியது.

மரண தண்டனை பற்றி வள்ளுவர் சொல்லிய கருத்துக்கள், தொழில் துறையில் வள்ளுவன் கருத்துக்கள், வள்ளுவனும்
பிளேட்டோவும், வீரமாமுனிவரின் பார்வையில் திருக்குறள், உலக நீதிநூல்களில் திருக்குறளின் இடம்,
வள்ளுவனின் கொள்கைகள் மற்றும் இந்தியச்சிந்தனையிலும் மரபிலும் குறளின் தன்மை, வள்ளுவரின் சான்றோன்,
வள்ளுவனின் மதசாற்பற்ற நிதிநூல், இந்திய இலக்கியப் பிண்ணனியில் திருக்குறள், வள்ளுவர் வகுத்த
கல்விக்கொள்கை, வள்ளுவர் காட்டும் தலையாயக் குறள்கள், வள்ளுவரின் பொருட்பால் கருத்துக்கள், திருக்குறளில் குடி போன்ற தலைப்புகளில் நடந்த சொற்பொழிவுகள் திருக்குறளை பல கோணங்களில் அலசியது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையில் எவ்வகையில் உதவும் என்பதனையும் எடுத்துரைத்தன.

திருக்குறள் மாநாடு உருவாவதற்கு காரணமான, வாஷிங்டன் தமிழ் சங்கத்தால் தொடர்ச்சியாக
இருவாரங்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருக்குறள் ஆய்வுக்கூட்டம் பற்றியும், அது எவ்வ'று நடத்தப்படுகின்றது
என்பது பற்றியும் பேசப்பட்டது. மற்ற தமிழ்ச்சங்கங்களும் இவ்வாறான ஆக்கப்பூர்வமான் ஆய்வுக்கூட்டங்களை நடத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

தன்னார்வங்கொண்ட தமிழிர்களால், தன்னார்வ அடிப்படையில் இம்மாநாட்டு முயற்சி 18 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டு, அனைவரது ஒத்துழைப்ப'லும் வெற்றி-பற்றது என்பதும், குறள் ஆய்வுக்கண்ணோட்டத்தில் மட்டுமே அணுகப்பட்டது என்பதும் இம்மாநாட்டின் சிறப்பம்சங்களில் சிலவாகும். மேற்கத்திய உலகுக்கு வள்ளுவம் எடுத்துச்செல்லும் பணியில் ஒரு படி முன்னேறியதற்கு இந்தமாநாட்டின் வெற்றி ஒரு சான்று.

செவிக்குணவில்லாத போழ்து மாநாட்டில் வயிற்றுக்கு மிகச்சிறப்பான முறையில், சிறந்த உணவுகள் ஈயப்பட்டன
என்பதனை அவசியம் சொல்லியே ஆகவேண்டும். செவிக்கும், வாய்க்கும் விருந்து படைத்த இம்மாநாடு
கண்களுக்கும் விருந்தளிக்கத் தவறவில்லை. குறட்பாக்களுக்கு புதுமையான முறையில் 2 மணி நேரம்
பரதத்தில் நாட்டிய நாடகமாக ஆடிய பத்மராஜா சகோதரிகள் பார்வையாளர்கள் அனைவரது
பாராட்டுக்களையும் பெற்றார்கள் என்பதில் ஐயமில்லை. வெள்ளி, சனி மாலை நேரங்களில் அமெரிக்கவாழ்
இளைய தலைமுறையினர் திருக்குறளின் அடிப்படையில் நடத்திய கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் புதுமையானதாகவும், வெகுவாக ரசிக்கத்தக்க வகையிலும் இருந்ததொடு அவர்களுக்கு குறளின்பால் ஆத்மார்த்தமான ஈடுபாடுகொள்ள வழிவகுத்தது என்று சொன்னால் மிகையாகாது.
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Monday, August 08, 2005

பொய்மையும் வாய்மையிடத்த

இது எனக்கு செவிவழி வந்த உண்மைக்கதை. இந்தக்கதை எங்காகிலும் பிரசுரிக்கப்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனாலும் என்னால் இதனைப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. ஒரு கட்சித்தலைவர், ஆரம்பகாலகட்டத்தில், தன்னுடைய கட்சிப்பணிக்காக ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தார். சிறிய அழகான கிராமம். அக்கிராமத்தின் எல்லையோரப் பகுதியில் ஒரு சிறிய கோயிலும் மண்டபமும் இருந்தது. அருகினில் ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு பேய் இருப்பதாகவும் அது இரவு நேரத்தில் எவரேனும் அப்பகுதியில் நடமாடிக்கொண்டிருந்தால் அவரை அடித்து விடுவதாகவும், இரத்தம் கக்கி இறந்து விடுவதாகவும் மக்களிடையே பேச்சு இருந்து வந்தது. இந்த கட்சிக்காரர் பேய் பிசாசு எல்லாம் ஒன்றும் இல்லை அது எல்லாம் கட்டுக்கதை என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

இப்படியாக அவர் ஊர் மக்கள் சிலரிடம் பேசிக்கொண்டு இருந்த பொழுது அவர்கள் அவரிடம் பந்தயம் கட்டத் தயாரானார்கள். ஒரு நாள் இரவு பொழுது அவரால் அந்த பேய்மரத்தில் தங்கியிருந்து அடுத்த நாள் உயிருடன் திரும்பி வரமுடியுமானால் அவர்கள் பேய் இருப்பதை நம்ப மறுப்பதோடு ஒரு தொகையினையும் பந்தயமாக வைத்தார்கள். இந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த பந்தயத்தை ஏற்றுக்கொண்டு கட்சிக்காரர் அன்று முன்னிரவே அந்த மரத்தில் ஏறி ஒளிந்து கொண்டார். எறும்புக்கடிகளுக்கும், சிறு சிறு பூச்சிகளின் தொந்தரவுதளுக்குமிடையில் தூங்காமல் விழித்துக் கவனித்திருந்தார்.

எந்தச் சலனமும் இல்லாமல் நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. நள்ளிரவு தாண்டியிருந்த சமயத்தில், சர சரவென்ற சத்தம் வந்தது. தூரத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் நகர்ந்தது தெரிந்தது. இவருக்கு இதயத்துடிப்பு அதிகரிகக அரம்பித்தது. இவர் நன்றாக மரத்தைக்கட்டிப் பிடித்துக்கொண்டு கவனிக்க ஆரம்பித்தார். மெதுவாக மரத்தினை நோக்கி வந்த அந்த உருவம் சிறிது விலகி அங்கிருந்த மண்டபத்தினை நோக்கிச் சென்றது. இப்படிக் கவனித்துக்கொண்டு இருந்த நேரத்தில் மற்றொரு திசையிலிருந்த ஏதோ நகருகின்ற ஓசைக் கேட்டது. அங்கிருந்தும் ஒரு பெரிய உருவம் மரத்தினை நோக்கி நகர்ந்து சென்றது. மண்டபத்தின் முன்பகுதியில் அந்த வெள்ளை உருவம் சிறிது நேரம் நின்றது. இன்னொரு உருவமும் மண்டபத்தின் முன்பகுதியை நெருங்கும்போது, அந்த உருவங்களின் அடையாளம் இவருக்குத் தெரியவாரம்பித்தது. பின்னர், அவ்விரு உருவமும் மண்டபத்தினுள்ளே சென்று மறைந்தது. வெள்ளையுருவம் அக்கிராமத்தில் மேல்சாதியினைச் சேர்ந்த ஒரு விதவைப்பெண். இன்னொரு உருவம் அதே கிராமத்தை சேர்ந்த கீழ்சாதி இளைஞன்.

சிறிது நேரத்தில் அவர் மெதுவாக மரத்திலிருந்து கிழிறங்கி அமைதியாக ஊருக்குள் சென்று அவர் அறையில் படுத்துக்கொண்டார். காலைப் பொழுது புலர்ந்தது. பந்தயம் கட்டிய நண்பர்கள் வந்தார்கள். என்ன நடந்தது என்று கேட்டார்கள். அதற்கு அக்கட்சிக்காரர் சொன்னார், 'எனக்கு பயமாக இருந்த்தால் நான் இரவு அம்மரத்தில் தங்கவில்லை" என்று.

ஏன் அப்படிச் சொன்னார்?



பகி்ர்வேன்...
-நித்தில்